திருச்சியில் கைதி அடித்து கொலை - பாளை. சிறையில் கூடுதல் பாதுகாப்பு
நெல்லை: திருச்சி சிறையில் கைதி அடித்து கொல்லப்பட்டதை அடுத்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டு்ள்ளது.
சிறையில் அடைக்கப்பட்டுள்ள பிரபல ரவுடிகள் உள்ளிட்ட முக்கிய கைதிகளை வேறு சிறைக்கு மாற்றியுள்ளனர்.
திருச்சி மத்திய சிறையில் கடந்த 3ம் தேதி ஆந்திராவை சேர்ந்த கிருஷ்ணா என்ற கைதி அடித்து கொலை செய்யப்பட்டார்.
ஆயுள் தண்டனை கைதி ஆதித்யா கமல் என்பவர் சாம்பார் பரிமாறும்போது, இருவருக்கும் தகராறு ஏற்பட்டு கிருஷ்ணா உருட்டு கட்டையால் அடித்து கொல்லப்பட்டார். இந்த சம்பவம சிறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து சிறை பணியாளர்கள் சிலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
நெல்லை மாவட்டத்தில் 1998ம் ஆண்டுக்கு பிறகு நடந்த ஜாதி கலவரத்திற்கு பிறகு பாளையங்கோட்டை சிறையில் கைதிகள் ஜாதி வாரியாக பிரிக்கப்பட்டு தனித்தனி பிளாக்குகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் முன்னாள் அமைச்சர் ஆலடி அருணா கொலை, ரவுடி மதன் கொலை, மற்றும் கீழப்பாட்டம் கொலை, எஸ்ஐ வெற்றிவேல் கொலை வழக்குகளில் கைது செய்யப்பட்டவர்கள் கண்காணிப்புக்குரிய கைதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இது தவிர தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களை சேர்ந்த பிரபல ரவுடிகளும் இதில் அடைக்கப்பட்டுள்ளனர்.
திருச்சி சம்பவத்தை அடுத்த ரவுடிகள் பட்டியல் தயாரித்து அவர்களை வேறு சிறைக்கு மாற்றுவதற்கு சிறை நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
பல்வேறு கொள்ளை மற்றும் கொலை சம்பவங்களில் தொடர்புடைய வீரமாணிக்கபுரம் பிரிவு கைதிகள் வேலூர் சிறைக்கும், எஸ்ஐ வெற்றிவேல் கொலை வழக்கில் கைதான கந்தன் உள்ளிட்டோர் மதுரை சிறைக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.
மேலும் சில ரவுடிகளை வேறு சிறைக்கு மாற்றுவது குறித்து அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications