நாடாளுமன்றத்தில் அழகிரி தமிழில் பேசும் விவகாரம் - மீரா குமார் கருத்து

மக்களவையில் உறுப்பினர்கள் தங்களது தாய் மொழியில் கேள்விகள் கேட்க முடியும். அதேசமயம், அமைச்சர்கள் ஆங்கிலம் அல்லது இந்தியில் மட்டுமே பேச முடியும் என்ற நாடாளுமன்ற விதி கூறுகிறது.
இந்த விதிச் சிக்கலால், மத்திய கேபினட் அமைச்சராக உள்ள மு.க.அழகிரியால் பேச முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அவருக்குப் பதில் தற்போது இணை அமைச்சராக உள்ள ஸ்ரீகாந்த் ஜனாதான் கேள்விகளுக்குப் பதில் அளித்து வருகிறார்.
இது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. அழகிரியை தமிழில் பேச அனுமதிக்க வேண்டும் என்று சபாநாயகர் மீரா குமாருக்கு திமுக தரப்பிலிருந்து கோரிக்கைகள் போயுள்ளன.
இதையடுத்து தன்னை வந்து சந்திக்குமாறு அழகிரிக்கு உத்தரவிட்டார் மீரா குமார். இருப்பினும் இதுவரை அழகிரி, மீரா குமாரை சந்திக்கவில்லை.
இந்த நிலையில், மீரா குமார் நேற்று சென்னை வந்தார். மீனம்பாக்கம் விமான நிலையத்தில் அவரை தமிழக சட்டசபை சபாநாயகர் ஆவுடையப்பன் உள்பட பலர் வரவேற்றனர்.
அப்போது செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
சபாநாயகராக பதவி ஏற்றபின் முதல் முறையாக சென்னைக்கு வருகிறேன். இங்கு சில நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள உள்ளேன் என்றார்.
அவரிடம் பாராளுமன்றத்தில் தான் தமிழில் பேச அனுமதிக்கும்படி கேட்பது தொடர்பாக, மு.க.அழகிரி உங்களை சந்தித்து பேச இருப்பதாக கூறியுள்ளாரே என்ற கேள்விக்கு,
ஏற்கனவே மு.க.அழகிரி என்னை சந்திக்க நேரம் கேட்டு இருந்தார். அவரை சந்திக்க நானும் காத்திருந்தேன். ஆனால் அவர் வரவில்லை. அவர் எப்போதும் வரலாம்.
அடுத்த வாரம் அவர் என்னை சந்திக்க நேரம் கேட்டு இருக்கிறார். அவருடைய வரவுக்காக காத்து இருக்கிறேன். என்னை சந்தித்து அவருடைய குறைகளை தெரிவிக்கலாம். அவரை சந்தித்தபின் அவரது பிரச்சினைகளை தீர்க்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.
தனி தெலுங்கானா கோரி ராஜினாமா கடிதங்களைக் கொடுத்துள்ள ஆந்திர எம்.பி.க்களின் கடிதங்கள் ஏற்கப்படுமா என்ற கேள்விக்கு அவர் பதிலளிக்கையில்,
தெலுங்கானா கோரி எம்.பி.க்கள் ராஜினாமா கடிதம் தந்து உள்ளனர். ஆனால் அவர்களில் சிலரது கடிதம் முறைப்படி இல்லை. ஆகவே அந்த ராஜினாமா கடிதங்கள் நிராகரிக்கப்படும். முறைப்படி வந்துள்ள கடிதங்கள் மட்டும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு உள்ளன. விரைவில் அந்த கடிதங்கள் மீது உரிய முடிவு எடுக்கப்படும் என்றார் மீரா குமார்.












Click it and Unblock the Notifications