மும்பை நன்றாக உள்ளது, நலமாக உள்ளது- அமிதாப்

ஆஸ்கர் விருது பெற்ற ரசூல் பூக்குட்டியின் தொண்டு நிறுவனத்தின் தொடக்க விழாவுக்காக கொச்சி வந்திருந்தார் பச்சன். அவரிடம் சிவசேனா -ஷாருக் கான் விவகாரம் குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, மும்பை ரொம்ப நன்றாக உள்ளது. நலமாக உள்ளது என்றார் பச்சன்.
சிவசேனா, ஷாருக் கான் இடையிலான மோதலைத் தீர்த்து வைக்க முயல்வீர்களா என்ற கேள்விக்கு, மும்பை விவகாரம் குறித்து கொச்சியில் ஏன் பேச வேண்டும்?. இன்று நான் கலந்து கொண்டுள்ள நிகழ்ச்சி கேரள மக்களுக்கு அற்புதமான ஒரு திட்டம் தொடர்பானது. அதைத் தொடங்கி வைப்பதில் மகிழ்ச்சி அடைந்துள்ளேன்.
இந்தத் திட்டத்தை புரமோட் செய்ய மட்டுமே வந்துள்ளேன். அதைப் பற்றி மட்டுமே பேசுங்கள். அதில் மட்டுமே நாம் கவனம் செலுத்தினால் போதும் என நினைக்கிறேன் என்று கூறி சிவசேனா - ஷாருக் மோதல் குறித்து நேரடி பதில் கூறுவதைத் தவிர்த்தார் பச்சன்.
'முண்டு' அணிந்து வந்த அமிதாப்
முன்னதாக மனோரமா டிவியின் சார்பில் நடந்த 2009ம் ஆண்டின் நியூஸ்மேக்கர் விருது வழங்கும் விழாவில் கேரள பாணியில், தங்கக் கரையுடன் கூடிய முண்டு (வேட்டி) அணிந்து கலந்து கொண்டு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார் அமிதாப் பச்சன்.
நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் கே.வி.தாமஸ்,நடிகர்கள், மம்முட்டி, மோகன்லால் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பங்கேற்ற அமிதாப் பச்சன், ஸ்லம்டாக் மில்லியனர் படத்துக்காக ஆஸ்கர் விருது பெற்ற ரசூல் பூக்குட்டிக்கு விருதினை வழங்கிக் கெளரவித்தார்.
முண்டுடன் வந்திருந்த அமிதாப் பச்சன் குறித்து மம்முட்டி கூறுகையில், நீங்கள் ஃபார்மல் டிரஸ்ஸில் வருவீர்கள் என்று நினைத்திருந்தேன். அதனால்தான் நான் கூட சூட்டில் வந்தேன். ஆனால் நீங்களோ முண்டில் வந்து விட்டீர்களே என்று கூறினார்.
அதற்கு பதிலளித்த அமிதாப், ரோமில் இருக்கும்போது ரோமானியராக இரு என்று பழமொழி உள்ளதே என்று சிரித்தபடி கூற அரங்கமும் சேர்ந்து சிரித்தது.












Click it and Unblock the Notifications