பி.டி.கத்திரிக்காயை வர்த்தக நோக்கில் மட்டுமே பார்க்கும் மத்திய அரசு: ஜக்கி வாசுதேவ்

கோவையில் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
"இந்தியாவில் இயற்கை விவசாயத்தில் பல ஆயிரம் ஆண்டுகளாக கத்தரிக்காய் சாகுபடி நன்றாகவே உள்ளது.
இந் நிலையில், ஆரோக்கியத்தைப் பாதிக்கும் பி.டி. ரக பயிர்களை சந்தைக்கு கொண்டு வர வேண்டிய அவசியமென்ன? இது பொறுப்பற்ற செயல்.
பி.டி. கத்தரிக்காய்க்கு அனுமதி அளித்தால் அனைத்து உணவுப் பொருள்களும் சந்தைக்கு வந்துவிடும். இது மிகுந்த ஆபத்தை விளைவிக்கும்.
ஐரோப்பா உள்பட பல்வேறு நாடுகளில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகளில் அரசை மீறி தனியார் ஆதிக்கம் செலுத்தி வருவதால் வேறு வழியின்றி அங்கு பி.டி. ரக பயிர்கள் பயிரிடப்பட்டன. அதன் பாதிப்பு இன்றும் தெரிகிறது.
பி.டி. பயிர்களை பயிரிடக் கூடாது என வேளாண் விஞ்ஞானிகள், இயற்கை ஆர்வலர்கள், விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர். இருப்பினும், மக்களின் நலனில் அக்கறை கொள்ளாமல் பி.டி. ரக பயிர்களை சந்தைக்கு கொண்டு வர மத்திய அரசு வர்த்தக நோக்கில் பரிசீலனை செய்து வருகிறது.
வெளிநாட்டு நிறுவனங்களிடம் இருந்து விதைகளை வாங்கும் நிலை தொடர்ந்தால், இந்தியா மீண்டும் அடிமைப்படும் சூழல் உருவாகும். நாட்டில் பல விதமான விதைகள் குறைந்து வருகின்றன. 60 சதம் பேர் சைவ உணவுகளையும், 40 சதம் பேர் அசைவ உணவுகளையும் விரும்பிச் சாப்பிடுகின்றனர்.
மனிதனுக்குத் தேவையான சத்து, சைவ உணவில்தான் இருக்கிறது. ஆனால், அதற்கு நல்ல விதைகள் தேவை. அவற்றை இயற்கையான முறையில் உருவாக்குவதே சிறந்தது. மலட்டு விதைகள் வேண்டாம்.
அதைவிட முக்கியம் நல்ல விதைகள் விவசாயிகள் கையில் இருக்க வேண்டும். தனிப்பட்ட நிறுவனங்கள், அதுவும் அந்நிய நிறுவனங்கள் வசம் போய்விடக் கூடாது.
மரபணு மாற்றம் செய்யப்பட்ட கத்தரிக்காய்க்கு அனுமதி அளிப்பது தொடர்பாக அவசரம் காட்டப்படமாட்டாது என தமிழக அரசு அறிவித்துள்ளது விவசாயிகளை மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது. இருப்பினும், அவற்றை முற்றிலும் தடை செய்ய வேண்டும். இது குறித்து ஈஷா தரப்பிலும் அரசிடம் வலியுறுத்தப்படும்.." என்றார்.












Click it and Unblock the Notifications