உ.பியைச் சேர்ந்தவர்தான் நாட்டின் எதிர்காலத் தலைவர்: மமதா ஆரூடம்!
கான்பூர்: உத்தரப்பிரதேசத்தில் இருந்து வரும் ஒருவரே நாட்டின் எதிர்காலமாக திகழப் போகிறார் என ரயில்வே அமைச்சரும், திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மமதா பானர்ஜி பேசினார்.
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் 12 புதிய ரயில் சேவைகள் அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியும் கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் பேசிய போது சோனியா முன்னிலையில் மமதா இவ்வாறு குறிப்பிட்டார்.
காங்கிரஸ் பொதுச்செயலாளரும், உ.பி.யின் அமேதி தொகுதி எம்.பி.யுமான ராகுல்காந்தியை மனதில் வைத்துக் கொண்டே, சோனியாவுக்கு 'ஐஸ்' வைப்பது போல மமதா இவ்வாறு பேசியதாக கருதப்படுகிறது.
மமதா தனது பேச்சின் போது குறிப்பிடுகையில், 'அடுத்து வரும் ஆண்டுகளில் உத்தரப் பிரதேசத்தில் இருந்து வரும் ஒருவர் தான் நாட்டின் எதிர்காலமாக திகழப்போகிறார்.
இந்திய அரசியல் வரலாற்றில் உத்தரப்பிரதேசம் தவிர்க்க முடியாத முக்கிய இடத்தை பெற்றுள்ளது.
ஜவஹர்லால் நேரு, லால்பகதூர் சாஸ்திரி, இந்திராகாந்தி, ராஜீவ்காந்தி போன்றவர்கள் உத்தரப் பிரதேசத்தில் இருந்து சென்று தான் நாட்டை ஆண்டார்கள்.
ஐக்கிய முற்போக்கு கூட்டணித் தலைவர் சோனியா காந்தியும் கூட உத்தரப்பிரதேசத்தில் இருந்து தான் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்' என குறிப்பிட்டார் மமதா.












Click it and Unblock the Notifications