பிடி கத்தரி இப்போதைக்கு இல்லை: மத்திய அரசு

பிடி கத்தரிக்காய் குறித்து பல்வேறு இடங்களிலும் பொதுவிவாதம் நடத்தி முடித்துள்ள மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் இதுகுறித்து கூறுகையில்,
'பொதுமக்கள் ஆரோக்கியம் மற்றும் தொழில்ரீதியான பாதுகாப்பு ஆகியவற்றுக்கு எல்லாம் உத்தரவாதம் கிடைத்தால் தான் பிடி கத்தரி இந்திய விவசாயத்தில் அனுமதிக்கப்படும்.
இதுகுறித்த சந்தேகங்கள் அனைத்துக்கும் சுதந்திரமான, அறிவியல்பூர்வமான ஆய்வுகள் மூலம் அரசுக்கு விளக்கம் அளிக்கப்பட வேண்டும்.
பிடி கத்தரியை எதிர்ப்பவர்கள் கொள்கை ரீதியாக சில பிரச்னைகளை எழுப்புகிறார்கள். மரபணு மாற்றப்பட்ட கத்தரி விதைகள், இயற்கை விதைகளுடன் கலந்தால் அதன் விளைவு என்னவாக இருக்கும் என கேள்வி எழுப்புகிறார்கள்.
இவை எல்லாவற்றுக்கும் தெளிவான விடை கிடைத்த பின்னரே இவ்விஷயத்தில் இறுதி முடிவெடுக்கப்படும்.
தற்போதைய நிலையில், 11 மாநில அரசுகள், பசுமை இயக்க ஆர்வலர்கள், விவசாயத் துறையினர், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பெரும்பாலானோர் பிடி கத்தரிக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளதால் இந்த விதைகளை இந்திய விவசாயத்தில் பயன்படுத்த தற்போதைக்கு ஒப்புதல் அளிக்கப்படாது' என்றார்.
கர்நாடகம் தடை:
முன்னதாக பி.டி கத்திரிக்காய்க்கு தடை விதித்துள்ள மாநிலங்களின் வரிசையில் கர்நாடகமும் இணைந்தது.
தமிழகத்தில் பி.டி. கத்திரிக்கையை வளர்க்கவும், விற்கவும் தற்காலிகமாக தடை விதித்துள்ளது மாநில அரசு. இதேபோல மேலும் சில மாநிலங்களிலும் தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த வரிசையில் தற்போது கர்நாடகமும் இணைகிறது. இதுகுறித்து கர்நாடக மாநில தோட்டக்கலைத்துறை அமைச்சர் உமேஷ் கட்டி கூறுகையில், பிடி கத்திரிக்காயை வணிக ரீதியில் பயிரிடுவதற்கு கர்நாடக அரசு அனுமதிக்காது.
வணிக ரீதியிலான பிடி கத்திரிக்காய் வளர்ப்புக்குத் தடை விதிக்கப்படும். இதுதொடர்பாக மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளோம் என்றார்.












Click it and Unblock the Notifications