புதிய இரண்டு ரூபாய் நாணயம் வெளியீடு
சென்னை: இந்திய ரிசர்வ் வங்கி புதிய 2 ரூபாய் நாணயங்களை வெளியிட்டுள்ளது.
கண் பார்வையற்றவர்களுக்கான பிரெய்லி முறை எழுத்துக்களை அறிமுகப்படுத்திய லூயி பிரெய்லியின் (1809 - 2009) 200 வது பிறந்தநாள் விழாவை நினைவுகூரும் வகையில் இந்த நாணயம் வெளியிடப்பட்டுள்ளது.
27 மில்லி மீட்டர் விட்டம், 5.62 கிராம் எடை அளவுடன் துருப்பிடிக்காத எவர்சில்வரால் வடிவமைக்கப்பட்டுள்ளது இந்தப் புதிய நாணயம். இதில் 83 சதவீதம் இரும்பும், 17 சதவீதம் குரோமியமும் கலக்கப்பட்டுள்ளது.
நாணயத்தின் பின்புறத்தில் லூயி பிரெய்லியின் படம் நடுவில் பொறிக்கப்பட்டிருக்கும். மேற்புறத்தில் அவரது பெயர் ஹிந்தியிலும், ஆங்கிலத்திலும் பொறிக்கப்பட்டிருக்கும். படத்தின் கீழ்புறம் அவரது பெயர் பிரெய்லி முறையில் அச்சிடப்பட்டுள்ளது.
முன்புறத்தில் நாணயத்தின் முகம் இரு இணை கோடுகளால் மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கும். நடுப்பகுயின் இடதுபுறம் அசோகா தூணின் சிங்க முகம் பொறிக்கப்பட்டிருக்கும். நடுப் பகுதியின் வலப்புறத்தில் நாணயத்தின் மதிப்பு இலக்கம் 2 என்பது சர்வதேச எண் அளவில் பொறிக்கப்பட்டுள்ளது.
மேற்புறத்தில் இந்தியா என்று ஹிந்தியிலும், ஆங்கிலத்திலும் பொறிக்கப்பட்டுள்ளது.
இத்தகவல்களை ரிசர்வ் வங்கியின் பொது மேலாளர் எம்.எம். மாஜி அறிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications