கேரளா புதிய அணை கட்டினால் தமிழகத்தில் கலவரம் வெடிக்கும்: வைகோ
மதுரை: முல்லைப் பெரியாறு பகுதியில் கேரளா புதிய அணை கட்ட முற்பட்டால் தமிழகத்தில் கலவரம் வெடிக்கும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எச்சரிக்கை விடுத்துள்ளார்.
முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசையும், மத்திய அரசையும் கண்டித்து மதிமுக சார்பில் மதுரை தல்லாகுளத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் வைகோ பேசியதாவது:
முல்லைப் பெரியாறின் நீர்மட்டத்தை உயர்த்துவதற்கு கேரளா எந்த இடைஞ்சலும் ஏற்படுத்தக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.
ஆனால், கேரள அரசு புதிய சட்டத்தை வேண்டுமென்றே உருவாக்கி, எந்த அணையையும் உடைக்க தங்களுக்கு உரிமை உண்டு என்றும் இதில் நீதிமன்றம் தலையிடக்கூடாது என்றும் கூறுகிறது.
தற்போது கேரள அரசு முல்லைப் பெரியாறு அணையை உடைப்பதை குறிக்கோளாகக் கொண்டுள்ளது. புதிய அணை கட்ட ஆய்வு நடத்த அனுமதி கொடுத்ததன் மூலம் மத்திய அரசு, தமிழ்நாட்டுக்கு துரோகம் இழைத்துவிட்டது.
ஆய்வுக்கு அனுமதிக்கப்பட்ட இடத்தில் அணை கட்ட இயலாது என்று கேரள அரசின் ஆய்வுக்குழு கூறிவிட்டதால் இப்போது முல்லைப் பெரியாறு அணையின் பக்கத்திலேயே புதிய அணை கட்ட கேரளம் திட்டமிட்டு வருகிறது.
ஏற்கெனவே 136 அடியாக நீர்மட்டத்தைக் குறைத்ததால் 78 ஆயிரம் ஏக்கர் பாசன உரிமையை இழந்ததோடு விளைச்சல் இழப்பு, மின் உற்பத்தி நஷ்டம் என இதுவரை தமிழகத்துக்கு ரூ.3,900 கோடி அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
இப்போது அணை உடைக்கப்பட்டால் 2.17 லட்சம் ஏக்கர் நிலம் பாசனத்துக்கு தண்ணீர் இன்றி பாதிக்கப்படும். அது மட்டுமல்ல தென்மாவட்ட மக்களுக்கு குடிநீர் கிடைக்காமல் பிரச்னை ஏற்படும்.
கேரள அரசு புதிய அணையை கட்டும் முயற்சியில் ஈடுபட்டால் தமிழகத்தில் கலவரம் வெடிக்கும் என்றார்.












Click it and Unblock the Notifications