அதிகரிக்கும் நெருக்கடி-பொன்சேகா குறித்து ராஜபக்சேவுடன் பேச பான் கி மூன் முடிவு
ஐ.நா.: இதுவரை இருந்தவர்களிலேயே மிகப் பெரிய அளவில் சர்ச்சைக்குள்ளாகியிருக்கும் ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
பொன்சேகா கைது செய்யப்பட்ட விதம் உலக அளவில் கடும் கண்டனங்களைக் குவித்து வருகிறது. அமெரிக்கா இந்த செயலை கண்டித்துள்ளது.
பொன்சேகாவை பிடரியில் அடித்து, இழுத்துச் சென்ற விதம் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இந்த செயலுக்கு பல நாடுகளும், மனித உரி்மை அமைப்புகளும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், பான் கி மூன் மட்டும் அனைவரும் அமைதி காக்க வேண்டும். கைதைக் கண்டித்து போராட்டங்கள் நடத்தக் கூடாது என்று பேசியிருந்தார்.
இதுவும் சர்ச்சையைக் கிளப்பி விட்டுள்ளது. உலகளாவிய அளவில் நெருக்கடிகள் அதிகரித்துள்ளதால் பொன்சேகா விவகாரம் குறித்து ராஜபக்சேவுடன் தொலைபேசி மூலம் பான் கி மூன் பேசவுள்ளாராம்.
இதுகுறித்து பான் கி மூனின் செய்தித் தொடர்பாளர் மார்ட்டின் நெசர்கி கூறுகையில், மகிந்தா ராஜபக்சேவுடன் பேச பான் கி மூன் விருப்பம் கொண்டுள்ளார்.
சட்டப்படியான நடவடிக்கைகளை உறுதி செய்ய வேண்டும். சட்ட விதிகளை கடைப்பிடிக்க வேண்டும். வரவிருக்கிற நாடாளுமன்றத் தேர்தலுக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்று பான் கி மூன் வலியுறுத்துவார் என்றார் நெசர்கி.
ஏற்கனவே அதிபர் தேர்தல் குறித்து பெரும் சர்ச்சைகள் நிலவி வந்த நிலையில், அப்போதும் தேர்தல் அமைதியாக முடிந்தது பெரும் நிம்மதியைத் தருவதாக பான் கி மூன் மகிழ்ச்சி தெரிவித்திருந்தார்.
ஆனால் தேர்தல் ஆணையரை தலையில் துப்பாக்கியை வைத்து மிரட்டி வாக்குகளை மாற்றி விட்டனர், பல முறைகேடுகள் நடந்தது, மின்னணு முறையில் மோசடிகளைச் செய்து விட்டனர் என்று இலங்கை எதிர்க்கட்சிகள் ஒட்டுமொத்தமாக புகார் கூறியும் அதுகுறித்து பான் கி மூன் வாயே திறக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் தற்போது பொன்சேகா கைது விவகாரம் பெரும் எதிர்ப்பலைகளை எழுப்பியுள்ளது. அது போக கைது செய்யப்பட்ட போது அதைப் படம் பிடித்த பத்திரிக்கையாளர்கள் தாக்கப்பட்டுள்ளனர். அவர்களின் வீடியோ கேமராவின் சிப்களைப் பறித்து அழித்துள்ளனர் ராணுவத்தினர். செய்திகள் வெளியிடுவதிலும் கடும் கெடுபிடிகளை இலங்கை அரசு விதித்துள்ளது. இதனால் பான் கி மூன் சற்றேனும் அசைந்து கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
விஜய் நம்பியாரைக் காக்க முயற்சி...?
இதற்கிடையே விஜய் நம்பியாரைக் காக்கும் முயற்சிகளும் ரகசியமாக நடந்து வருவதாக ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
வெள்ளைக் கொடியுடன் விடுதலைப் புலிகள் இயக்க மூத்த தலைவர்கள் ராணுவத்திடம் சரணடைய வந்தபோது அவர்கள் அனைவரும் கோத்தபயா ராஜபக்சேவின் உத்தரவின் பேரில் ஈவு இரக்கமின்றி சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இந்த சம்பவம் நடந்தபோது விஜய் நம்பியார் கொழும்பில் இருந்ததாக கூறப்படுகிறது. விஜய் நம்பியார் கொடுத்து உறுதிமொழியை நம்பித்தான் புலிகள் இயக்கத் தலைவர்கள் சரணடையச் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இந்த விவகாரத்தில் நம்பியாரின் தொடர்புகளும் தற்போது வலுவாக ஆராயப்பட்டு வருகின்றன.
ஆனால் நம்பியார் குறித்த பேச்சே கூடாது என்று பான் கி மூன் கருதுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மேலும் பொன்சேகா இதுகுறித்து கூறிய குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் பான் கி மூன் ஒரு போர்க்குற்ற விசாரணைக்கு உத்தரவிடும்போது கூட விஜய் நம்பியார் குறித்து எந்தவித விசாரணையும் இடம் பெறாமல் பார்த்துக் கொள்ள அவர் தீர்மானித்திருப்பதாகவும் தெரிகிறது.
ஆனால் இதை ஐ.நாவுக்கான இலங்கை தூதர் பலித கொஹனா மறுத்துள்ளார். சம்பவம் நடந்தபோது விஜய் நம்பியார் கொழும்பிலேயே இல்லை என்று அவர் கூறியுள்ளார்.
விஜய் நம்பியாரின் சகோதரரான சதீஷ் நம்பியார்தான் இலங்கை ராணுவத்தின் ஆலோசகர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications