கருமுட்டை தானம்: கல்லூரி பெண்களிடையே பரவும் புது 'டிரெண்ட்'
டெல்லி: டெல்லியில் உள்ள கல்லூரி மாணவிகள் மற்றும் விடுதிகளில் தங்கி பணிபுரியும் பெண்கள் மத்தியில் கருமுட்டை தானம் செய்யும் போக்கு அதிகரித்துள்ளது.
தங்களின் ஆடம்பர செலவினங்களுக்கு ஏற்படும் பணப் பற்றாக்குறையை இதன் மூலம் அவர்கள் நிவர்த்தி செய்துகொள்ள முற்படுகின்றனர்.
ஏராளமான மகப்பேறு மருத்துவமனைகளில் பெண்கள் தாமாக முன்வந்து கருமுட்டை வழங்குவதாகவும், ஒரு பெண்ணிடம் சுமார் 10 முதல் 12 வரை முட்டைகள் பெறப்படுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
இதன்மூலம் பெண்களுக்கு ரூ.20 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை கிடைப்பதாக தெரிகிறது. தற்போதை இளம் தலைமுறை பெண்களிடம் இந்த போக்கு பரவலாக காணப்படுவதாக ஃபீனிக்ஸ் மருத்துவமனையின் மகப்பேறு சிறப்பு மருத்துவர் ஷிவானி சச்தேவா கூறுகிறார்.
'கடந்த வாரம் கூட நான்கு பெண்கள் மருத்துவமனைக்கு வந்து கருமுட்டை வழங்க விரும்புவதாக கூறினார்கள். எதற்கு என கேட்டபோது, செலவுக்கு பணம் போதவில்லை என்று கூறினர்.
பெரும்பாலும் 22 முதல் 24 வயது பெண்கள் எங்களிடம் அதிகளவில் வருகின்றனர். 18 வயது பெண்கள் கூட வீட்டை ஏமாற்றிவிட்டு வருவதுண்டு.
ஒருமாதத்து ஒன்று என்ற விகிதத்தில் பெண்களின் உடலில் கருமுட்டை உருவாகிறது. அவர்களிடம் வீணாவதை விட, குழந்தை பேறு இல்லாதவர்களுக்கு அந்த கருமுட்டை பயன்படும் என்பதால் நாங்களும் அவர்களை நிராகரிக்க முடிவதில்லை.
அதேசமயம் ஃபீனிக்ஸ் மருத்துவமனைக்கு கருமுட்டை கேட்டு மாதத்துக்கு சராசரியாக 15 கோரிக்கைகள் வரும். பெரும்பாலும் வெளிநாட்டில் இருந்தே கேட்கப்படும்.
தேவைக்கு அதிகமாக முட்டைகளை நாங்கள் பெண்களிடம் இருந்து பெறமுடியாது. எனவே பெரும்பாலான பெண்களை நாங்கள் திருப்பி அனுப்பிவிடுவோம்' என்றனர்.
அதோடு பல வெளிநாட்டினர், தங்களுக்கு அதிக புத்திக்கூர்மையுடன் கூடிய பளிச்சென்ற குழந்தை தேவை எனக் கேட்பதால், டெல்லியில் உள்ள கல்லூரி பெண்களின் கருமுட்டைகளுக்கு தனி கிராக்கி இருப்பதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications