சோனியா-ஜெ சந்திப்பு எதார்த்தமாக நடந்தது: சாவ்லா சொல்கிறார்

சமீபத்தில் டெல்லியில் நடந்த தேர்தல் கமிஷனின் வைர விழாவுக்கு ஜெயலலிதாவையும் அழைத்திருந்தார் நவீன் சாவ்லா. அந்த விழாவுக்கு சோனியா காந்தியும் வந்தார்.
விழா தொடங்கும் முன் சோனியா காந்தியை ஜெயலலிதா சந்திக்கும் வகையில் ஒரு ஏற்பாட்டைச் செய்தார் நவீன் சாவ்லா.
அதாவது சோனியா வரும் வரை ஜெயலலிதாவை ஒரு அறையில் இருக்க வைத்தார். சோனியா வந்தவுடன் அவரையும் அந்த அறைக்குள் சென்று அமர வைத்தார்.
இந்த சந்திப்பை சோனியாவே எதிர்பார்க்கவில்லை என்று கூறப்படுகிறது. இருவரும் ஒரு அறையில் சந்திக்க நேர்ந்ததால் ஹலோ சொல்லிக் கொண்டதோடு சந்திப்பு முடிந்துவிட்டது.
சில ஆண்டுகளுக்கு முன் தன்னை தனிப்பட்ட முறையில் கடுமையாக ஜெயலலிதா விமர்சித்ததில் இருந்தே அவருடன் எந்தத் தொடர்பும் சோனியா வைத்துக் கொள்வதில்லை. கூட்டணி விஷயமாக அதிமுக தரப்பிலிருந்து வந்த ஆட்களையும் சோனியா அனுமதிக்கவில்லை.
இதனால் எப்படியாவது சோனியை ஒருமுறை நேரில் சந்தித்து விடும் வாய்ப்புக்காக நெடு நாட்களாகக் காத்திருந்த ஜெயலலிதாவுக்கு நவீன் சாவ்லாவின் இந்த திட்டமிட்ட ஏற்பாடு பெரும் உதவியாக இருந்தது.
நவீன் சாவ்லாவின் இந்த 'மறைமுக' உதவிக்கு பாமகவும் திமுகவும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
ஏற்கனவே பெனனாகரம் இடைத் தேர்தலை அதிமுக கோரிக்கையை ஏற்று கிடப்பில் போட்ட சாவ்லா, இப்போது அதிமுகவை காங்கிரசுடன் கைகோர்க்க வைக்க கூட்டணிக்கும் உதவ முயல்வதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந் நிலையில் தான் இந்த சந்திப்புக்கு ஏற்பாடு செய்யவில்லை என்று நவீன் சாவ்லா மறுத்துள்ளார். அவர் கூறுகையில்,
இந்திய தேர்தல் கமிஷன் வைரவிழா என்பது இந்திய ஜனநாயகத்தின் மிகப்பெரிய நிகழ்ச்சி. எனவே இதில் அங்கீகரிக்கபட்ட அரசியல் கட்சி தலைவர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்று கருதினேன். எனவே எல்லோரையும் அழைத்தேன்.
பெரும்பாலான தலைவர்கள் வந்திருந்தார்கள். அப்போது ஒரு வருக்கொருவர் நலம் விசாரித்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். சாதாரணமாக நடந்த சந்திப்பு தான். இதற்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்? என்றார் சாவ்லா.
அதிமுக உடன் உறவா: காங்கிரஸ் மீண்டும் மறுப்பு...
இந் நிலையில் திமுக, காங்கிரஸ் கட்சிகளின் உறவு சுமுகமாகவும், உறுதியாகவும் உள்ளது. யாரும் அறிக்கைகள் வெளியிட்டு இந்த உறவை முறிக்க முடியாது என காங்கிரஸ் கட்சியின் தேசியத் செயலாளர் சாந்தாராம் நாயக் கூறினார்.
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செயலாளரும், கட்சியின் தமிழ்நாடு விவகாரங்களின் பொறுப்பாளருமான சாந்தாராம் நாயக் சென்னையில் இன்று நிருபர்களை சந்தித்தார்.
அப்போது தமிழகத்தில் அடுத்துவரும் சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் அதிமுக கூட்டணி அமைக்க விரும்புகிறது என்பதை ஜெயலலிதா தனது பேட்டியில் சூசகமாக குறிப்பிட்டத்து குறித்து சாந்தாராமிடம் கேட்டபோது,
'அறிக்கைகளை வெளியிட்டு திமுக-காங்கரஸ் உறவை உடைக்கலாம் என்றால் அது யாராலும் முடியாது. திமுக-காங்கிரஸ் உறவு சுமுகமாகவும், உறுதியாகவும் இருக்கிறது.
எனவே அதிமுகவுடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்குமா என கேட்பதெல்லாம் அர்த்தமற்றது என்றார்.
அதே போல டெல்லியில் நிருபர்களிடம பேசிய காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங் சிங்வி, காங்கிரஸ்-திமுக கூட்டணி உறுதியாகவும், ஸ்திரமாகவும் உள்ள நிலையில் அதிமுகவுடன் கூட்டணி என்ற பேச்சுக்கு எது இடம் என்றார்.












Click it and Unblock the Notifications