விரக்தியின் விளிம்பில் ஜெ: கை கொடுக்குமா 'கை'?

Subscribe to Oneindia Tamil

Jayalalitha
-சுதா அறிவழகன் & ஏ.கே.கான்

மதிமுகவையும் இடதுசாரிகளையும் மட்டும் கூட்டணியில் வைத்துக் கொண்டு அடுத்த ஆண்டு வரப் போகும் சட்டமன்றத் தேர்தலை சந்தித்தால் என்ன ஆகும் என்பது ஜெயலலிதாவுக்கு இப்போதே தெரிந்துவிட்டது போலிருக்கிறது!.

1981ல் தான் ஜெயலலிதா அதிமுகவில் இணைந்தார். அன்று ஆரம்பித்த அவரது அரசியல் வாழ்க்கை, இப்போது இதுவரை இல்லாத அளவுக்கு மாபெரும் ஸ்தம்பிப்புக்கு ஆளாகியுள்ளது.

எம்.ஜி.ஆர். பார்த்துப் பார்த்து கட்டிய கோட்டையான அதிமுக இன்று சாதாரண கோலிக் குண்டுக்கே நடு நடுங்கிப் போகும் அளவுக்கு நிலை தடுமாறிக் கிடக்கிறது.

மூத்தவர்களை மதிக்காமல் மிதிப்பது, தடாலடியாக முடிவுகளை எடுப்பது, அந்த முடிவுகளை திணிப்பது, நிலையான கொள்கை, லட்சியம் என்று எதுவுமே இல்லாமல் போன போக்கில் அரசியல் நடத்துவது, இஷ்டத்திற்கு கூட்டணிகளை மாற்றுவது, கூட்டணி சேரும் கட்சிகளை அலட்சியப்படுத்துவது, யார் நல்லவர், யார் கெட்டவர், யார் விசுவாசி, யார் துரோகி என்பதைத் துல்லியமாகக் கணிக்கத் தெரியாதது என்று ஏகப்பட்ட காரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்- அதிமுகவின் இன்றைய அதலபாதாள வீழ்ச்சிக்கு.

1991 தான் ஜெயலலிதாவின் அரசியல் வாழ்க்கையின் திருப்புமுனை ஆண்டு. அந்த ஆண்டு ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார். அந்த சமயத்தில், காங்கிரஸுடன் கூட்டணி வைத்து சட்டசபைத் தேர்தலைச் சந்தித்தார் ஜெயலலிதா.

ராஜீவ் காந்தி படுகொலையால் நிலவிய அனுதாப அலை ஜெயலலிதாவின் அதிமுகவுக்கு பேருதவி புரிந்தது. ஒட்டுமொத்தமாக அத்தனை இடங்களிலும் வென்றது அதிமுக- காங்கிரஸ் கூட்டணி.

ஆனால், அந்த வெற்றிக்கு நான் தான் காரணம் என்று சொல்லியதோடு, இது ராஜீவ் காந்தி மரணத்தால் கிடைத்த வெற்றி அல்ல என்று கூறி தனது முதல் கூட்டணிக் கட்சியான காங்கிரசை முதல் முதலில் வெறுப்படித்தார் ஜெயலலிதா.

தொடர்ந்து மகா ஊழல் புகார்களுடன் ஆட்சி நடத்திய ஜெயலலிதாவுடன் 1996ல் நடந்த தேர்தலின்போது கூட்டணி சேரக் கூடாது என்று தமிழக காங்கிரஸில் மூப்பனார் தலைமையிலான பிரிவு கோரியது. ஆனால் 'மெளனச் சாமியான' நரசிம்மராவ் கடைசி வரை மெளனம் காத்துவிட்டு கடைசி நேரத்தில் ஜெயலலிதாவுடன்தான் கூட்டணி என்று அறிவித்தார்.

இதனால் காங்கிரஸ் உடைந்தது. மூப்பனார் தலைமையிலான தமிழ் மாநில காங்கிரஸ் திமுகவுடன் உடன்பாடு கண்டது. குமரி அனந்தன் தலைமையிலான காங்கிரஸ் ஜெயலலிதாவுடனேயே இருந்தது.

அந்தத் தேர்தலில் அதிமுக மாபெரும் தோல்வி கிடைத்தது. ஜெயலலிதா உள்பட அவரது அமைச்சர்கள் அனைவரும் படு தோல்வி அடைந்தனர்.

இப்படி படு தோல்வியைச் சந்தித்தாலும் 1998ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் மிக அட்டகாசமான கூட்டணியை அமைத்து தமிழக அரசியல் காட்சியை மாற்றிக் காட்டினார் ஜெயலலிதா.

அந்தத் தேர்தலில் மதிமுக, பாமக, பாஜக, வாழப்பாடி ராமமூர்த்தியின் தமிழக ராஜீவ் காங்கிரஸ், சுப்பிரமணிய சாமியின் ஜனதா கட்சி ஆகியவற்றுடன் கூட்டணி அமைத்து மாபெரும் வெற்றி கண்டார் ஜெயலலிதா.

காங்கிரஸ் தனி அணியாகப் போட்டியிட, திமுக தலைமையிலான தமாகா, சிபிஐ உள்ளிட்டவை இடம் பெற்ற கூட்டணியை புரட்டி எடுத்தார் ஜெயலலிதா. அந்த மும்முனைப் போட்டியில், அதிமுக கூட்டணிக்கு 30 சீட்கள் கிடைத்தன. திமுக கூட்டணிக்கு 9 இடங்கள் மட்டுமே கிடைத்தன.

ஆனால் அந்த லோக்சபாவின் ஆயுள் காலம் ஒரு வருடம் கூட முடியாத நிலையில் ஜெயலலிதாவின் அவசரத்தனத்தால் வாஜ்பாய் ஆட்சி கவிழ்ந்தது. 1999ல் மீண்டும் லோக்சபாவுக்குத் தேர்தல் வந்தது. (நிதித்துறையைக் கேட்டு மிரட்டி, அதற்கு வாஜ்பாய் பணியாததால் ஆட்சியை கவிழ்த்தார் என்று அப்போது பரவலாகப் பேசப்பட்டது)

இந்த முறை தமிழகத்தில் கூட்டணி மாறியது. காங்கிரஸை தன் பக்கம் இழுத்தார் ஜெயலலிதா. கூடவே இடதுசாரி கட்சிகளும் இணைந்தன. அதேசமயம், பாஜக, பாமக, மதிமுக ஆகியவை திமுக பக்கம் வந்தன.

அந்தத் தேர்தலில் திமுக கூட்டணிக்குக் கிடைத்தது 26 சீட்கள். அதிமுக கூட்டணிக்கு 13 இடங்களே கிடைத்தன.

இந்தத் தேர்தலின்போது தான் காங்கிரஸ் தலைவரானார் சோனியா காந்தி. ஆனால், அவர் பிரசாரத்திற்கு தமிழகம் வந்தபோது அவரைப் புறக்கணித்தார் ஜெயலலிதா. அதாவது இவரை சார்ந்து எந்தக் கட்சியாவது இருந்தால் அது வாஜ்பாயாக இருந்தாலும் சோனியாவாக இருந்தாலும் கேவலப்படுத்துவாராம்.

ஆனாலும் 2001ல் நடந்த தமிழக சட்டசபைத் தேர்தலில் மானம் போனாலும், மீண்டும் அதிமுகவுடன் சோனியா கூட்டணி அமைத்தார். கூடவே தமாகா, கம்யூனிஸ்ட் கட்சிகள், முஸ்லீம் லீக் ஆகியவையும் இணைந்தன. அதிமுக கூட்டணிக்கு மிகப் பெரிய வெற்றி கிடைத்தது. 195 சீட்களைக் கைப்பற்றியது.

ஆனால் தேர்தல் முடிந்த சில நாட்களிலேயே கூட்டணியை விட்டு விலகினார் டாக்டர் ராமதாஸ். காரணம், ஜெயலலிதாவை சந்திக்கச் சென்ற அவரை கோட்டையில் 4 மணி நேரம் காக்க வைத்தார் ஜெயலலிதா. வாஜ்பாய்-சோனியாவையே கேவல்படுத்திய ஜெயலலிதாவுக்கு ராமதாஸ் எல்லாம் எம்மாத்திரம்.

இதையடுத்து காங்கிரசையும் வெட்டிவிட்டார். சோனியாவைத் தாக்கினார். தனது எடுத்தேன்-கவிழ்த்தேன் நடவடிக்கைகளால் பல்வேறு தரப்பினரின் அதிருப்தியையும் வாரிக் கொட்டிக் கொண்டார் ஜெயலலிதா.

இதனால் 2004ல் நடந்த லோக்சபா தேர்தலில் அதிமுக கடும் வீழ்ச்சியைச் ச்நதித்தது. இம்முறை பாஜகவுடன் சேர்ந்து கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட அதிமுகவுக்கு ஒரு சீட் கூட கிடைக்கவில்லை. அதுவும தன்னுடன் கூட்டணி பேச்சு நடத்த பிரமோத் மகாஜன் எல்லாம் வரக் கூடாது, பெரிய தலைவர் தான் என்றெல்லாம் நிபந்தனை போட்டார் ஜெயலலிதா. ஏற்கனவே சூடு கண்டிருந்தாலும் பாஜக அதையெல்லாம் மறந்துவிட்டு ஜெயலலிதாவின் நிபந்தனைகளை எல்லாம் ஏற்றுக் கொண்டு கூட்டணி வைத்தது.

ஆனால், திமுக, காங்கிரஸ், மதிமுக, இடதுசாரிகள் உள்ளிட்டவை இணைந்த கூட்டணி அத்தனை இடங்களிலும் வென்றது. 40 இடங்களிலும் தோற்று தமிழகத்தில் தோல்வியில் ஒரு 'ரெக்கார்ட் பிரேக்கே' செய்து காட்டினார் ஜெயலலிதா.

திமுக கூட்டணியின் இந்த மாபெரும் வெற்றியால் தான் மத்தியில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வர முடியாமல் போனது.

1996ம் ஆண்டு தேர்தலில் தோற்ற ஜெயலலிதா அடுத்த இரண்டு ஆண்டுகளிலேயே தனது செல்வாக்கை சரி செய்து கொள்ள முடிந்தது. ஆனால், 2004ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் தோல்விக்குப் பின் ஜெயலலிதா இதுவரை திரும்ப எழ முடியவில்லை என்பது தான் நிஜம்.

2004க்குப் பிறகு அதிமுக அமைத்த கூட்டணிகள் அதற்கு எந்தப் பயனையும் தரவில்லை. மாறாக தொடர் தோல்விகளைத்தான் கொடுத்துக் கொண்டிருக்கின்றன.

தொடர்ந்து 2006ம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் அதிமுக தோல்வியைத் தழுவியது. அடுத்து நடந்த உள்ளாட்சித் தேர்தலில் ஜெயலலிதா பெரும் தோல்வி அடைந்தார்.

2009ம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலின்போது வெற்றியை நிர்ணயிக்கும் சக்தியாக கருதப்பட்ட பாமகவை தன் பக்கம் பெரும்பாடுபட்டு இழுத்தார் ஜெயலலிதா. இது பலம் வாய்ந்த கூட்டணியாகக் கருதப்பட்ட நிலையில் திமுக கூட்டணி படு சாதாரணமாக வெற்றியைத் தட்டிச் சென்று விட்டது.

அடுத்தடுத்து நடந்த அனைத்து இடைத் தேர்தல்களில் தோற்றார் ஜெயலலிதா. இன்று வரை எழவே இல்லை.

இந் நிலையில் தான், மீண்டும் காங்கிரசுடன் கைகோர்த்தால் தவிர தனக்கு இனிமேல் வெற்றி என்பது எட்டாக் கனி என்பதை ஜெயலலிதா உணர்ந்து கொண்டு, இப்போது அந்தக் கட்சியுடன் கூட்டணிக்கு அலைந்து கொண்டிருக்கிறார்.

எம்.ஜி.ஆர். காலத்தில் அதிமுகவுடன் இருந்து வந்த நிரந்தரமான கூட்டணிக் கட்சி காங்கிரஸ் மட்டுமே. மிகத் தெளிவான பார்முலாவை வகுத்து அதன்படி எம்.ஜி.ஆர். நடந்து வந்ததால் அந்தக் கூட்டணியை யாராலும் உடைக்க முடியவில்லை. இந்தக் கூட்டணியும் ஒவ்வொரு தேர்தலையும் வெற்றி கொண்டு வந்தது.

காங்கிரஸ் கட்சிக்கென்று பெரும் பலம் இல்லாவிட்டாலும் கூட அதற்கென்று உள்ள வாக்கு வங்கியை எம்.ஜிஆர். மதித்தார். இது அவருக்கு நல்ல பலனையே கொடுத்தது.

ஆனால் ஜெயலலிதாவின் அரசியல் இலக்கணமே 'யூஸ் அண்ட் த்ரோ' தான் என்பதால் அவருடன் கூட்டணி சேர காங்கிரஸ் இந்த நிமிடம் வரை தயாராக இல்லை.

அப்படியே திமுகவை வெட்டிவிட காங்கிஸ் விரும்பினாலும் தேமுதிகவைத் தான் நாட ஆர்வமாக உள்ளதே தவிர, ஜெயலலிதாவுடன் உறவாடத் தயாராக இல்லை.

கட்சிகள் கூட்டணி அமைப்பதும், உடைத்துக் கொண்டு வெளியே வருவதும், ஒருவர் மீது ஒருவர் புகார் கூறி 'தெருச் சண்டை' போடுவதும் புதிதல்ல.

ஆனால், ஜெயலலிதா இதிலும் 'ஸ்பெஷஸ் கேஸ்' தான். சில ஆண்டுகளுக்கு முன் அத்வானியை டெல்லியி்ல் சந்தித்துவிட்டு நிருபர்களை சந்தித்த ஜெயலலிதா, சோனியா குறித்து பேசிய பேச்சுக்கள் யாரும் மறக்க முடியாதவை.

'வெளிநாட்டுப் பொம்பளை', 'பதி பக்தி இல்லாதவர்', 'ஆண்டோனியோ மொய்னோ' என்று விமர்சித்தார். அதாவது அடுத்து பாஜக தான் ஆட்சிக்கு வரும் (தனக்கு துணை பிரதமர் பதவி தருவார்கள்) என்ற நம்பிக்கையில் ஜெயலலிதா பேசிய பேச்சுக்கள் அவை.

அதற்கு சில ஆண்டுகளுக்கு முன்பு தான் காங்கிரசுடன் கூட்டணி சேருவதற்காக அத்வானிக்கு 'செலக்டிவ் அம்னீஷியா' இருப்பதாகச் சொன்னவரும் இதே ஜெயலலிதா தான்.

இப்படி ஜெயலலிதாவிடம் சிக்கி அசிங்கப்படாத கூட்டணிக் கட்சித் தலைவர்களே இல்லை என்ற நிலையில் இப்போதைக்கு 'எதையும் தாங்கும் இதயம் கொண்ட' வைகோ மட்டுமே அதிமுக கூட்டணியில் மிஞ்சியுள்ளார்.

பாவம் வைகோ, அவருக்கும் வேறு வழியில்லை. மதிமுகவை திமுக அடியோடு ஒழித்துவிட முயலும் நிலையில் அவர் அதிமுகவுடன் தான் இருந்தாக வேண்டிய நிலை. இதனால அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தலிலும் அவர் அதிமுக கூட்டணியிலேயே தொடர்ந்து இருக்க நிறைய வாய்ப்புகள் உண்டு.

ஆனால், இடதுசாரிக் கட்சிகள் என்ன செய்யும் என்று தெரியாது. ஒரு இடைத் தேர்தலில் அதிமுகவை ஆதரிப்பார்களாம்.. இன்னொரு இடைத் தேர்தலில் ஆதரிக்க மாட்டார்களாம்.. ஆதரித்தாலும் அதிமுகவுடன் மேடை ஏற மாட்டார்களாம்... இவ்வாறு 'தெளிவான அரசியல்' நடத்தும் இவர்கள் என்ன செய்வார்கள் என்பதை கடைசி நிமிடம் வரை சொல்ல முடியாது.

ராமதாஸோ மீண்டும் திமுகவுடன் கூட்டணி அமைக்கும் வேலைகளை ஆரம்பித்துவிட்டார். இருவரையும் நவீன் சாவ்லாவே சேர்த்து வைத்துவிடுவார் போலிருக்கிறது!.

இதற்கிடையே தமிழகத்தில் முதன்முதலில் ஜெயலலிதா ஆரம்பித்து வைத்த, 'ஓட்டுக்காக லட்டுவுக்குள் மூக்குத்தி திட்டத்தை' திமுக கடந்த இடைத் தேர்தல்களில் (பணவீக்கத்தையும் கணக்கில் சேர்த்து!) ஓட்டுக்கு 10,000 ரூபாய் வரை கொண்டு போய்விட்டது.

அடுத்த சட்டமன்றத் தேர்தலிலும் பணவீக்கமும் ஓட்டுக்கு கிடைக்கும் துட்டும் நிச்சயம் அதிகமாகும். ஆளும்கட்சியான திமுகவும் மத்தியில் ஆளும் கட்சியான காங்கிரசும் செலவுகளை எளிதாக சமாளித்துவிட முடியும்.

அது போக திமுக செய்துள்ள நல்ல காரியங்களையும் மறக்க முடியாது. கடும் விலைவாசிக்கு இடையிலும் 1 ரூபாய்க்கு நல்ல அரிசி தருகிறார்கள், மலிவு விலையில் பலசரக்கு, இலவச கலர் டிவி வேறு.

மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடனை வாரி வழங்குகிறார்கள், அரசு ஊழியர்களை நன்றாக கவனித்துக் கொள்கிறார்கள். அருந்ததியர்கள், சிறுபான்மையினருக்கு தனி இடஒதுக்கீடு என ஓட்டு வங்கி அரசியல் வேறு.

அத்தோடு மத்திய அரசி் ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தையும் தீவிரமாக அமலாக்கி கிராமப்புற மக்களுக்கு வேலையும் தருகின்றனர். சமீபத்திய கலைஞர் காப்பீட்டுத் திட்டமும் பெரும் வெற்றி பெற்றுவிட்டது ஏழைகள் கூட மிக் பெரிய தனியார் மருத்துவமனைகளி்ல் இலவசமாக சிகிச்சை பெற ஆரம்பித்துவிட்டனர்.

இவ்வாறு திமுக ஓட்டு விதைகளை போட்டுவிட்டு அடுத்த சட்டமன்றத் தேர்தலில் அறுவடை செய்துவிடலாம் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கிறது.

ஆனால், ஜெயலலிதாவோ எத்தைத் தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலையில் இருக்கிறார். இதனால் கூட்டணிக்காக அலைபாய்ந்து கொண்டிருக்கிறார்.

ஈருடல் ஓருயிராக இருந்து வந்த அதிமுக-காங்கிரஸ் கூட்டணியை உடைத்த ஜெயலலிதாவே, இப்போது தானாக காங்கிரசுடன் உறவு வரும் என்று கூற வேண்டிய அவல நிலை. அத்தோடு தனக்கு ஆதரவான ஒரு சில பத்திரிக்கைகள் மூலம் காங்கிரஸ்-அதிமுக கூட்டணி வரும் என்று செய்தி பரப்ப வேண்டிய துர்பாக்கிய நிலை. (இவர்கள் தான் கடந்த மக்களவைத் தேர்தலில் அதிமுக 34 இடங்களில் வெல்லப் போவதாகவும், அடுத்த பிரதமருக்கான போட்டி மாயாவதிக்கும் ஜெயலலிதாவுக்கும் தான் என்றெல்லாம் 'ஆருடம்' கூறியவர்கள். ஜெயலலிதாவை தவறாக வழிநடத்துவதில் இவர்களுக்கு பெரும் பங்கு உண்டு)

இவர் கெஞ்சிக் கூத்தாடியும் காங்கிரஸ் கூட்டணிக்கு வராவிட்டால் அவர்களை வழக்கம்போல் திட்டிவிட்டு தேமுதிகவுடன் கூட கூட்டணிக்கு ஜெயலலிதா முயன்றாலும் ஆச்சரியப்படக் கூடாது.

விஜய்காந்துக்கும் 'டெபாசிட்' மிக முக்கியம் என்பதால் அவரும் ஜெயலலிதாவுடன் கூட்டணி அமைத்தாலும் ஆச்சரியமில்லை.

என்ன.. முதல்வர் பதவியை விஜய்காந்த் கேட்பார்.. அவ்வளவு தான்!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+