40 நாட்களில் ரூ.1 கோடி திருட்டு விசிடி பறிமுதல்
நாகர்கோவில்: தமிழகம் முழுவதும் கடந்த 40 நாட்களில் திருட்டு வீடியோ தடுப்பு பிரிவு போலீசார் மேற்கொண்ட நடவடிக்கையில் ரூ.1 கோடிக்கும் அதிகமான சிடிக்கள் பறிமுதல் செய்யப்பட்டு 268 பேர் கைது செய்யப்பட்டனர்.
தமிழகத்தில் திருட்டு விசிடிக்களை ஒழிக்க கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் இது தொடர்பாக மூத்த நடிகர்கள் ரஜினி, கமல், சரத்குமார் ஆகியோர் முதல்வரை சந்தித்து மனு அளித்தனர்.
திருட்டு விசிடிக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடு்க்கும்படி முதல்வரிடம் அவர்கள் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து தற்போது திருட்டு விசிடிக்களை ஒழிக்கும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
திருட்டு வீடியோ தடுப்பு பிரிவு ஏடிஜிபி அர்ச்சனா ராமசுந்தரம் உத்தரவின்பேரில் ஐஜி ரமேஷ் குடவாலா, டிஐஜி ஆறுமுகம் மேற்பார்வையில் எஸ்பி சாந்தி, டிஎஸ்பி ராஜேந்தின் ஆகியோர் தலைமையில் தனிப்படை போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த இரு தினங்களாக தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் அதிரடி சோதனை நடந்தது.
இதில் 3 மாவட்டத்திலும் சேர்த்து மொத்தம் 26 பேர் கைது செய்யப்பட்டனர். 25 ஆயிரம் சிடிக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றின் மதிப்பு ரூ.25 லட்சம் ஆகும்.
கைப்பற்றப்பட்ட சிடிக்களில் அதிகளவு சமீபத்தில் திரைக்கு வந்த வேட்டைக்காரன், ஆயிரத்தில் ஒருவன், நாணயம், குட்டி, போர்க்களம் உள்ளிட்ட புதிய படங்கள் ஆகும்.
புதுச்சேரி, பெங்களூர், கேரளாவில் இருந்து இவை கொண்டு வரப்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications