ரூ. 1 கோடி கேட்டமைன் போதைப் பொருள் பறிமுதல்- அண்ணன், தம்பி கைது
சென்னை: ரூ. 1 கோடி மதிப்புள்ள கேட்டமைன் போதைப் பொருளை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். இதைக் கடத்த முயன்ற அண்ணன், தம்பி கைது செய்யப்பட்டனர்.
சென்னை சிந்தாதிரிபேட்டையில் இருந்து வெளிநாடுகளுக்கு கேட்டமைன் போதை பொருள் கடத்தப்படுவதாக கமிஷனர் ராஜேந்திரனுக்கு ரகசிய தகவல் வந்தது.
இதையடுத்து அமைக்கப்பட்ட தனிப்படை போலீஸார்,
சிந்தாதிரிபேட்டை மார்க்கெட் பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது வாலிபர் ஒருவர் பெரிய அட்டை பெட்டி பார்சலுடன் பஸ் நிறுத்தம் அருகே வந்திறங்கினார்.
சந்தேகத்துக்கிடமான வகையில் செயல்பட்ட அந்த வாலிபரை சுற்றி வளைத்த போலீசார் அட்டை பெட்டி பார்சலை பிரித்து பார்த்தனர்.
உள்ளே புடவை, சுடிதார், நைட்டி போன்ற துணிகள் இருந்தன. ஆனால் பெட்டிக்கு அடியில், துணிகளுக்கிடையே கேட்டமைன் பதுக்கி வைத்திருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.
நாலரை கிலோ எடையுள்ளது அது. இதையடுத்து மண்ணடி பவளக்கார தெருவைச் சேர்ந்த அஜிஸ் அக்பர் (32) என்ற வாலிபரை கைது செய்தனர்.
அவனிடம் நடத்திய விசாரணையில் அவர் மும்பையில் இருந்து ஜவுளி பார்சல்களுடன் போதை பொருளை சென்னைக்கு கடத்தி வந்ததாகவும், சென்னையில் இருந்து இந்தோனேசியாவுக்கு கடத்தி செல்ல இருந்ததாகவும் தெரிவித்தார்.
இந்த போதை பொருளை விருந்து நிகழ்ச்சிகளின்போது குளிர்பானத்திலும், அதிக போதைக்காக மதுவிலும் கலந்து கொடுத்து பெண்களை மயக்க பயன்படுத்துவார்கள் என்றும் கூறினான்.
அவர் கொடுத்த தகவலின் பேரில் மண்ணடி பவளக்காரர் தெருவில் உள்ள அவரது வீட்டில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த 3 கிலோ எடையுள்ள கேட்டமைன் போதை பொருளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
அக்பரின் தம்பி பசீர் அன்வரையும் கைது செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட ஏழரை கிலோ கேட்டமைனின் மதிப்பு ரூ. 1 கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications