பொன்சேகா கைது எதிரொலி-கொழும்புவில் பெரும் கலவரம்!
கொழும்பு: முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகா கைது செய்யப்பட்டு தரக்குறைவாக இழுத்துச் செல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது ஆதரவாளர்கள் கொழும்பு நகரில் பயங்கர கலவரத்தில் ஈடுபட்டனர்.
நகரின் பல இடங்களில் பொன்சேகாவின் ஆதரவாளர்களுக்கும், ஆளும்கட்சி ஆதரவாளர்களுக்கும் இடையே கைகலப்பு, மோதல் ஏற்பட்டது. அதிரடிப் படை போலீஸார் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியும், தண்ணீரைப் பீய்ச்சியடித்தும், தடியடி நடத்தியும் ஆர்ப்பாட்டக்காரர்களைக் கலைத்தனர்.
பொன்சேகா கைது செய்யப்பட்டதை எதிர்த்து அவரது மனைவி அனோமா பொன்சேகா, கொழும்பில் உள்ள உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய வந்தபோது நீதிமன்றத்துக்கு வெளியே அவரது ஆதரவாளர்கள் ஏராளமாய் கூடியிருந்தனர். அப்போது அவர்கள் அரசுக்கு எதிராக கோஷமிட்டனர். அவர் கைது செய்யப்பட்டதைக் கண்டித்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கலவரம் வெடிக்கும் சூழல் உருவானது. போலீஸார் தலையிட்டு அவரது ஆதரவாளர்களைக் கலையச் செய்தனர்.
அனோமா தாக்கல் செய்த மனு வரும் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என நீதிமன்றம் அறிவித்துள்ளது.
கைது செய்யப்பட்டுள்ள பொன்சேகா கடற்படை தலைமையகத்தில் வைக்கப்பட்டுள்ளதால் அவரது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும், ராஜபக்சே அரசு வேண்டுமென்றே அவர் மீது பொய் வழக்குப் பதிவு செய்து கைது செய்துள்ளதாகவும் எதிர்க்கட்சிகள் புகார் தெரிவித்தன.
ஆனால் அரசு இதை மறுத்துள்ளது. அவர் மீது பழிவாங்கும் நடவடிக்கை எதையும் அரசு மேற்கொள்ளவில்லை. ராணுவ ரகசியங்களை வெளியிட்ட காரணத்தால் ராணுவச் சட்டப்படிதான் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அரசியல் லாபத்துக்காக எதிர்க்கட்சிகள் அரசு மீது அவதூறு புகார் தெரிவிப்பதாக செய்தித்துறை அமைச்சர் லக்ஷ்மண் யப அபேவர்தனே தெரிவித்தார்.
பொன்சேகாவை வக்கீலுடன் சந்தித்த அனோமா...
இதற்கிடையே கைது செய்யப்பட்டுள்ள பொன்சேகாவை பார்ப்பதற்கு அவருடைய மனைவி அனோமாவுக்கு செவ்வாய்க்கிழமை இரவு அனுமதி அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ராணுவ தலைமையகத்தில் தனிப் பிரிவில் வைக்கப்பட்டுள்ள பொன்சேகாவை அனோகாவும் அவர்களின் வழக்கறிஞரும் சுமார் 3 மணி நேரம் சந்தித்துப் பேசினர். இந்த நேரத்தில் பொன்சேகாவுக்கு அவருக்கு வீட்டிலிருந்து உணவு எடுத்துவர அனுமதி தரப்பட்டது.
இதுகுறித்து ராணுவ செய்தித் தொடர்பாளர் சமரசிங்கே கூறுகையில், "கைது செய்யப்பட்டுள்ள பொன்சேகா சிறையில் அடைக்கப்படவில்லை. அவருக்கு உரிய வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. அவருடைய மனைவி மற்றும் வழக்கறிஞரை பார்ப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது" என்று ராணுவ செய்தித்தொடர்பாளர் பிரசாத் சமரசிங்கே தெரிவித்தார். அதேநேரம் இதுவரை தனது தரப்பில் வழக்கறிஞரை நியமித்துக்கொள்ள பொன்சேகாவுக்கு அனுமதி தரப்படவில்லை என்றும் தெரிவித்தார்.
பொன்சேகா கைது செய்யப்பட்டபோது அவர் அவமரியாதையாக நடத்தப்பட்டதாக அனோமா குற்றம்சாட்டியதற்கு மறுப்பு தெரிவித்த சமரசிங்கே, முன்னாள் ராணுவ தளபதி என்ற அந்தஸ்தில் உள்ள அவரை உரிய மரியாதையுடன்தான் கைது செய்து அழைத்துச் சென்றோம் என்றார்.












Click it and Unblock the Notifications