ஐபிஎஸ் அதிகாரி போல நடித்து போலீஸ் அதிகாரிகளிடம் லட்சக்கணக்கில் மோசடி-பெண் கைது

முன்பு சிவகாசி ஜெயலட்சுமி போலீஸாரை தனது சாகச வலையில் வீழ்த்தி பெருமளவில் சூறையாடினார். போலீஸ் இன்ஸ்பெக்டர் போலவும் வேடமிட்ட மோசடி செய்தார்.
இப்போது அதே பாணியில் சாருலதா என்ற பெண் போலீஸ் அதிகாரிகளை தனது வலையில் வீழ்த்தி பல லட்சம் பணத்தை சுருட்டியுள்ளார். இவர் எஸ்.பியாகவும் நடித்து சென்னை மாநகர காவல்துறையையே ஏமாற்றி மோசடி செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
எஸ்.பி. சாருலதா என்ற பெயரில் சென்னை நகரை வலம் வந்தார் இவர். ஊனமாஞ்சேரியில் உள்ள போலீஸ் பயிற்சி அகாடமியில் சூப்பிரண்டாக பணியாற்றுவதாகவும் கூறிக் கொள்வார்.
அவரது நடை, உடை, பாவனையைப் பார்த்து காவல்துறையினரே அதிகாரி என நம்பிவிட்டனர்.
இந் நிலையில் ஒரு போலீஸ் உயர் அதிகாரியைத் தொடர்பு கொண்டு சாருலதா பேசியுள்ளார். அப்போது அந்த அதிகாரிக்கு சாருலதா மீது சந்தேகம் வந்துள்ளது. உடனடியாக ஐபிஎஸ் அதிகாரிகள் குறித்த பட்டியலைப் பார்த்தபோது சாருலதாவின் பெயர் அதில் இல்லை என்பதைக் கண்டுபிடித்தார். உடனடியாக போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனிடம் விவரத்தைக் கூறினார்.
இதையடுத்து சாருலதாவை கையும் களவுமாகப் பிடிக்க உத்தரவிட்டார் கமிஷனர் ராஜேந்திரன். இதையடுத்து இணை கமிஷனர் சேஷசாயி, துணை ஆணையர் செந்தாமரை கண்ணன் ஆகியோர் தனிப்படையை அமைத்து இவரை கண்காணித்து வந்தனர்.
நேற்று பிற்பகலில் காரில் போலீஸ் சூப்பிரண்டு சீருடையில் சாருலதா வடசென்னை பகுதியில் வந்து கொண்டிருந்தார். அவரை பின்தொடர்ந்து வந்த துணை கமிஷனர் செந்தாமரை கண்ணன், உதவி கமிஷனர் குமார் ஆகியோர் பாரிமுனை பகுதியில் வைத்து அவரை மடக்கினர்.
உடனடியாக வண்ணாரப்பேட்டை போலீஸ் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்ட சாருலதாவிடம் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில் அவரது குட்டு வெளிப்பட்டது.
25 வயதான சாருலதா பட்டப்படிப்பு படித்தவர். அத்லெடிக் வீராங்கனை போல இருக்கும் இவர் கடந்த ஒரு வருடமாகவே போலீஸ் அதிகாரி வேடத்தில் பலரயையும் ஏமாற்றி வந்ததாக ஒப்புக் கொண்டார்.
சில உயர் அதிகாரிகளை தனது வலையில் விழவைத்து நிறைய காரியங்களை சாதித்துள்ளதாகவும் தெரிகிறது.
இவரது வலையில் சிக்கி ஒரு உதவி ஆணையர், பல லட்சம் பணத்தை இழந்துள்ளாராம். அந்த உதவி ஆணையருடன் சாருலதா படு கித்தாப்பாக காரில் வலம் வந்துள்ளார் என்கிறார்கள்.
சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் போலீஸ் வேலை வாங்கி தருவதாக ஏராளமானோரிடம் லட்சக்கணக்கில் பணம் வாங்கி அவர் நாமம் போட்டுள்ளார்.
சாருலதாவின் கார், எஸ்.பி. சீருடைகள், லேப்-டாப் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
சாருலதா குறித்த முழுவிவரங்களையும் கமிஷனர் ராஜேந்திரன் வெளியிடுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு இன்னும் கல்யாணம் ஆகவில்லை. தனது அக்கா வீட்டில் அவர் தங்கியிருந்திருக்கிறார்.
இவருடன் இரு வாலிபர்களும் காரில் வருவது வழக்கம். அவர்களையும் பிடித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
சாருலதா வீட்டில் ரெய்டு-போலி ஆவணங்கள் சிக்கின:
இதற்கிடையே இன்று காலை சாருலதா தனது சகோதரியுடன் வசித்து வந்த விருகம்பாக்கம் வீட்டில் போலீஸார் ரெய்டு நடத்தினர்.
இந்த ரெய்டின்போது அங்கு காவல்துறை தொடர்பான பல்வேறு போலி ஆவணங்கள், போலி அடையாள அட்டைகள் உள்ளிட்டவை சிக்கின.
அவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர். சாருலதாவுக்கு போலீஸ் தரப்பில் பலர் உதவியாக இருந்ததாகவும் தெரிய வந்துள்ளது. அவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க காவல்துறை முடிவு செய்துள்ளது.












Click it and Unblock the Notifications