நெல்லை அதிமுகவில் கோஷ்டி பூசல்-போஸ்டர் சண்டை!
தமிழகத்தில் அதிமுக உட்கட்சித் தேர்தல் கடந்த இரு மாதங்களாக நடைபெற்றது. இதில் தமிழகம் முழுவதும் நகர, ஓன்றிய, கிளை கழக பொறுப்பாளர்கள், நி்ர்வாகிகள் தேர்தல் நடத்தப்பட்டு சமீபத்தில் புதிய பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர்.
பல மாவட்டங்களில் அதிமுக புதிய நிர்வாகிகள் நியமனம் கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனால் கட்சி பிரமுகர்கள் பலர் ஜெயலலிதா வீட்டு முன் முற்றுகை போராட்டம், தீக்குளிப்பு போன்றவற்றை நடத்தினர்.
இந்நிலையில் நெல்லை புறநகர் மாவட்ட அதிமுகவில் கோஷ்டி பூசல் ஏற்பட்டுள்ளது.
நாடார் சமூக மக்களை அதிமுக புறக்கணிப்பதாகவும் அதற்கு நாடார் சமூகத்தை சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ பிசி ராஜேந்திரன், மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் விபி மூர்த்தி ஆகியோர் உடந்தையாக இருப்பதாகவும் கண்டித்து கீழப்பாவூர் ஓன்றிய அதிமுக சார்பில் புறநகர் மாவட்டம் முழுவதும் கண்டனமும், கண்ணீரும் என்ற தலைப்பில் போஸ்டர்களை அச்சடித்து அனைத்து பகுதிகளிலும ஒட்டியுள்ளனர்.
இப்பரபரப்பு போஸ்டரால் அதிமுவினர் மத்தியில் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. மேலும் நாடார் சமூகத்தை சேர்ந்த முன்னாள் எம்எல்ஏவும், மாவட்ட அவை தலைவருமான கே. அண்ணாமலை புறக்கணிக்கப்படுவதாகவும் கூறப்பட்டு வரும் நிலையில் இந்த போஸ்டர் மோதல் ஆரம்பித்துள்ளது.













Click it and Unblock the Notifications