தெலுங்கானா கமிட்டிக்கு எதிர்ப்பு - மீண்டும் பந்த் நடத்த அழைப்பு!

தங்களின் போராட்டத்தை மீண்டும் தீவிரப்படுத்தும் முகமாக நாளை தெலுங்கானாவில் முழுஅடைப்பு நடத்தப் போவதாகவும் தெலுங்கானா கூட்டு நடவடிக்கைக் குழு அறிவித்துள்ளது.
தனி தெலுங்கானா விவகாரத்தை ஆராய முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி பி.என்.ஸ்ரீகிருஷ்ணா தலைமையில் ஐந்து பேர் கொண்ட கமிட்டி ஒன்றை மத்திய அரசு அமைத்தது.
இக்கமிட்டி செயல்படுவதற்கான 7 அம்ச வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு இன்று வெளியிட்டது.
தெலுங்கானா கமிட்டிக்கான இந்த வழிகாட்டு நெறிமுறைகள், தெலுங்கானா விவகாரத்தை ஓரங்கட்டும் முயற்சி என்று தெலுங்கானா பகுதியில் உள்ள ஒட்டு மொத்த கட்சிகளும் அதிருப்தி தெரிவித்துள்ளன.
சமீபத்திய தெலுங்கானா கொந்தளிப்பை துவக்கி வைத்த டிஆர்எஸ் தலைவர் சந்திரசேகரராவ் மத்திய அரசின் இந்த அணுகுமுறையை கடுமையாக கண்டித்ததோடு, மத்திய அரசின் இந்த திட்டத்தை நிராகரிப்பதாகவும் கூறியுள்ளார்.
அவர் இதுபற்றி இன்று ஹைதராபாத்தில் கூறுகையில், 'மத்திய அரசு மீண்டும் ஒருமுறை தெலுங்கானா மக்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்துள்ளது. மத்திய அரசு அறிவித்துள்ள நெறிமுறைகளை நாங்கள் ஏற்றுக் கொள்ள முடியாது.
எனவே மீண்டும் நாங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்துவதைத் தவிர வேறு வழியில்லை. தெலுங்கானா பகுதி எம்எல்ஏ மற்றும் எம்பிக்கள் மட்டுமல்லாது அனைத்து பிரதிநிதிகளின் ராஜினாமாவை அரசு ஏற்பதற்கு என்ன செய்ய வேண்டுமோ அதில் கவனம் செலுத்துவோம்' என்றார்.
இதற்கிடையே, மத்திய அரசின் அறிவிப்பு குறித்து விவாதிப்பதற்காகவும், அடுத்தகட்ட நடவடிக்கைகளை திட்டமிடுவதற்காகவும் அனைத்து கட்சிகள் கொண்ட தெலுங்கானா கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டம் ஹைதராபாத் உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் இன்று மாலை அவசரமாக கூடியது.
அதில், மத்திய அரசின் அறிவிப்பை ஒட்டுமொத்தமாக நிராகரிப்பதாக கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும், மத்திய அரசு தெலுங்கானா கமிட்டியை உடனடியாக களைத்துவிட்டு தனி தெலுங்கானா மாவட்டம் உருவாக்குவதற்கான சட்டத்திருத்த மசோதாவை நேரடியாக நாடாளுமன்றத்தில் கொண்டுவரவேண்டும் என்றும் கூட்டு நடவடிக்கைக் குழுவில் வலியுறுத்தப்பட்டது.
போராட்டத்தை தொடரும் அடையாளமாகவும், முதல் கட்டமாகவும் நாளை முழுநேர 'பந்த்' அனுசரிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications