சரக்கு பரிவர்த்தனையில் ரூ.2.80 லட்சம் கோடி ஊழல்.. பாஜக பகீர் குற்றச்சாட்டு!
டெல்லி: சரக்கு பரிவர்த்தனை செய்ததில் மட்டும் மத்திய அரசு ரூ 2 லட்சத்து 80 ஆயிரம் கோடி ஊழலில் ஈடுபட்டுள்ளதாக பாஜக தலைவர் நிதின் கட்காரி குற்றம் சாட்டியுள்ளார்.
நாட்டில் உயர்ந்துவரும் விலைவாசி உயர்வைக் கண்டித்து டெல்லி பாஜக சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற கட்சித் தலைவர் நிதின் கட்காரி பேசியதாவது:
மன்மோகன்சிங் அரசு, சரக்கு பரிவர்த்தனைக்கு அனுமதி அளித்துள்ளது. ஆனால் இந்த வர்த்தகம் வெறும் காகிதத்தில் மட்டுமே நடக்கிறது. சரக்கு பரிவர்த்தனையில், 1 கோடியே 22 லட்சம் டன் மஞ்சள் விற்கப்பட்டது. ஆனால் அதில் 5 சதவீதம் மட்டுமே வினியோகிக்கப்பட்டது.
இதுபோல், ஒவ்வொரு பொருளிலும் ஊழல் செய்யப்பட்டுள்ளது. நடக்காத சரக்கு விநியோகத்துக்கு ரூ 2 லட்சத்து 80 ஆயிரம் கோடி மெகா ஊழல் நடைபெற்றுள்ளது. சரக்கு பரிவர்த்தனை என்ற பெயரில் மக்களை மத்திய அரசு கொள்ளை அடித்துக் கொண்டிருக்கிறது. ஏழை மக்களின் வாயில் இருந்து உணவை பறிக்கிறது.
விலைவாசி உயர்வுக்கு மன்மோகன்சிங், சோனியா காந்தி, சரத்பவார் ஆகியோரே காரணம். விலைவாசி உயர்வுக்கு எதிரான போராட்டத்தை பா.ஜனதா தீவிரப்படுத்தும். இப்போராட்டம், வெறும் டிரெய்லர்தான். மெயின் படம் இன்னும் ஆரம்பிக்கவில்லை.
அத்தியாவசிய பொருட்களின் விலையைக் கட்டுப்படுத்தத் தவறினால், வருகிற 22-ந் தேதி பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கும்போது, பாராளுமன்றத்தை முற்றுகையிடுவோம். இதில் நாடு முழுவதும் இருந்து 25 லட்சம் தொண்டர்கள் கலந்து கொள்வார்கள்.
பவாரின் கவலை ஐபிஎல் பற்றித்தான்!
விலைவாசி உயர்ந்து கொண்டிருக்கும் வேளையில், நமது வேளாண்மைத்துறை மந்திரிக்கு அதுபற்றிய கவலையே இல்லை. ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளைப் பற்றித்தான் அதிகம் கவலைப்படுகிறார். அவர் சிவில் சப்ளைத்துறை மந்திரியா? அல்லது கிரிக்கெட் மந்திரியா? அவரை பிரதமர் கிரிக்கெட் மந்திரியாக நியமிக்கலாம்.
விலைவாசி உயர்வை ஒரு நாள் கிரிக்கெட் போட்டிக்கு ஒப்பிடலாம். சர்க்கரை விலை, அரை சதத்தை (ரூ.50) தாண்டிய நிலையில், பருப்பு விலை, சதத்தை (ரூ.100) தாண்டி விட்டது. இந்த அணிக்கு சரத் பவார்தான் பயிற்சியாளர்.
நிலைமை இதே போல சென்று கொண்டிருந்தால், மத்திய மந்திரிகள் யாரும் ரோட்டில் நடமாட முடியாது. அனைத்து கட்சிகளும் விலைவாசி உயர்வுக்கு எதிராக தோளோடு தோள் நின்று போராட வேண்டும.." என்றார் கட்காரி.
இந்த ஆர்ப்பாட்டத்தில், மூத்த தலைவர்கள் சுஷ்மா சுவராஜ், முரளி மனோகர் ஜோஷி, அனந்த குமார், விஜய் கோயல் மற்றும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள், கட்சிக் கொடிகளை தாங்கியபடி பங்கேற்றனர்.
காய்கறி விலை உயர்வைக் குறிக்கும் வகையில், நிதின் கட்காரி, சுஷ்மா சுவராஜ் உள்பட பலர், காய்கறி மாலைகளை அணிந்திருந்தனர். பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மத்திய வேளாண்துறை மந்திரி சரத்பவார் ஆகியோருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன.












Click it and Unblock the Notifications