செல்லப் பிராணியின் சிகிச்சைக்காக 3,800 கிமீ கார் பயணம்!
சென்னை: சென்னை கால்நடை கல்லூரி மருத்துமனையில் சிகிச்சை அளிப்பதற்காக தனது நாயை 3 ஆயிரத்து 800 கி.மீ தூரம் காரிலேயே அழைத்து வந்துள்ளார் மேகாலயா மாநில அதிகாரி.
மேகாலயாவில் இருந்து சென்னைக்கு சிகிச்சைக்காக ஒரு நாய் 3,800 கிலோ மீட்டர் தூரம் காரில் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த நாய்க்கு சென்னை கால்நடை மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் இன்று (வெள்ளிக்கிழமை) சிகிச்சை அளிக்கப்படுகிறது.
மேகாலயா மாநிலம் ஷில்லாங்கை சேர்ந்தவர் சஞ்சய் சர்மா. இவர், தனது வீட்டில் அமெரிக்கன் பாக்சர் வகை நாய் ஒன்றை வளர்த்து வருகிறார். பிறந்து 16 மாதங்களே ஆன இந்த நாய் சில மாதமாக திடீர் திடீரென மயங்கி விழுந்தாக கூறப்படுகிறது.
விளம்பரத்துறையில் அதிகாரியான இவரால், உள்ளூர் மருத்துவமனைகளில் நாயின் பிரச்னையை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் சென்னை கால்நடை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு இவர் தனது நாயை நேற்று கொண்டுவந்தார்.
ரயில் அல்லது விமானத்தில் செல்ல பிராணியை அழைத்துவருவதில் சிக்கல் ஏற்படும் எனக்கருதி, மேகாலயாவில் இருந்து காரிலேயே தனது நாயை சென்னைக்கு அழைத்துவந்துள்ளார்.
ஷில்லாங்கில் இருந்து மேற்குவகம், ஒரிசா, ஆந்திரா வழியாக 3,800 கி.மீ தூரத்தை நாயுடன் காரில் கடந்து நேற்று முன்தினம் இரவு சென்னை வந்து சேர்ந்தார்.
சென்னை கால்நடை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்ட இந்த நாயை மருத்துவர்கள் பரிசோதித்தனர்.
அந்த நாய்க்கு 'சின்காப்ஸ்' என்ற நோய் தாக்கியுள்ளதாகவும், இருதயத்தில் கோளாறு இருப்பதையும் கண்டுபிடித்தனர். தொடர்ந்து அந்நாய்க்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications