ரூ.3 கோடி மதிப்புள்ள சீன போலி செல்போன் பேட்டரிகள், ஷூக்கள் பறிமுதல்!

இதுபற்றி சென்னை சுங்க இலாகா கமிஷனர் (துறைமுகம்-இறக்குமதி) சி.ராஜன் நிருபர்களிடம் கூறுகையில், "சென்னை சுங்க இலாகாவின் நுண்ணறிவு பிரிவு, கிளியரன்சுக்கு தயாராக இருந்த 2 கன்டெய்னர்களை சோதனை செய்தது.
ஒரு கன்டெய்னர் சீனாவின் ஷெகொவ்வில் இருந்து டெல்லியை சேர்ந்த ஸ்டார் ஓவர்சீஸ் நிறுவனத்தால் இறக்குமதி செய்யப்பட்டது. இதில் 11,190 ஷூக்களும், 29 ஆயிரம் செல்போன் பேட்டரிகளும் இருப்பதாக ஆவணங்களில் கூறப்பட்டிருந்தது. சரக்கு கிடங்கில் இருந்த அந்த கன்டெய்னரில் நோகியா பெயர் பொறித்த 16,318 செல்போன் பேட்டரிகளும், நைகி பெயர் பொறித்த 2970 ஜோடி ஷூக்களும் இருந்தன.
இந்த பேட்டரிகள் அந்த நிறுவனத்தின் அட்டை பெட்டியில் வைக்கப்படவில்லை, உபயோகிப்பு முறைக்கான விவரக் குறிப்புகளும் இல்லை. ஷூக்களும் தனித்தனி பெட்டிகளில் வைக்கப்படாமல் மொத்தமாக இருந்தது. இதனால் அவை போலியாக இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்தது. இதனால் நோகியா மற்றும் நைகி நிறுவனங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் நேரில் வந்து அந்த பொருட்களை சோதித்துப் பார்த்து அவை போலியானவை என உறுதி செய்தனர்.
2-வது கன்டெய்னர் சீனாவின் ஹாங்புவில் இருந்து டெல்லியைச் சேர்ந்த டோல்சி கோரம்மா என்ற நிறுவனத்தால் இறக்குமதி செய்யப்பட்டது. இதில் 22,750 டஜன் பிளாஸ்டிக் மொபைல் ஹவுசிங் (செல்போன் கூடு) இருப்பதாக ஆவணங்களில் கூறப்பட்டிருந்தது. மணலியில் இருந்த அந்த சரக்குகளை ஆய்வு செய்தபோது அதில் நோகியா பெயர் பொறித்த 22,833 செல்போன் கூடுகள் மொத்தமாக இருந்தன. அவையும் போலிகள் என நோகியா பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
இதனால் அந்த பொருட்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றின் சந்தை மதிப்பு சுமார் ரூ.3 கோடி. இந்த 2 இறக்குமதி நிறுவனங்களின் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. மேல் விசாரணைக்காக புதுடெல்லியில் உள்ள சுங்க இலாகாவுக்கும் தகவல் தெரிவித்துள்ளோம்.
ஆபத்தான பேட்டரிகள்...
இந்த போலி செல்போன் பேட்டரிகள் உபயோகிப்பவர்களுக்கு ஆபத்தை உருவாக்கலாம். இவை எந்தவிதமான பாதுகாப்பு சோதனை முறையையும் பின்பற்றாமல் தயாரிக்கப்பட்டவை. எந்த உத்தரவாதமும் இல்லை. வெடிக்கக் கூடிய ஆபத்தும் ஏற்படலாம்.
தங்கள் நிறுவன பெயர்களில் வரும் போலிகளை கண்டுபிடிப்பது எப்படி என்பது குறித்து நோகியா, இந்துஸ்தான் லீவர்ஸ் ஆகிய நிறுவனங்கள் சுங்க இலாகா அதிகாரிகளுக்கு பயிற்சிகளும் அளித்துள்ளன.
தொடர்ந்து இறக்குமதியாகி வந்த சீனத்து போலி சாக்லேட்டுகள் இப்போது குறைந்திருப்பதற்கு காரணம் எங்கள் அதிரடி நடவடிக்கைதான்", என்றார்.












Click it and Unblock the Notifications