ஷாருக் படத்தைப் பாதுகாத்து புனேவை கோட்டை விட்ட மகாராஷ்டிர அரசு - பாஜக கண்டனம்
டெல்லி: ஷாருக் கானின் படத்துக்கு பாதுகாப்பு கொடுக்கவே மகாராஷ்டிர அரசு அதிக முக்கியத்துவம் கொடுத்தது. அதைப் பயன்படுத்திக் கொண்ட தீவிரவாதிகள், புனேவில் தங்களது நாச வேலையை நிகழ்த்திக் கொண்டு விட்டனர் என்று பாஜக கூறியுள்ளது.
புனே சம்பவம் மகாராஷ்டிர அரசின் அலட்சியப் போக்கால்தான் நிகழ்ந்துள்ளது என்றும் பாஜக கூறியுள்ளது.
இதுகுறித்து பாஜக துணைத் தலைவர் முக்தார் அப்பாஸ் நக்வி கூறுகையில், மகாராஷ்டிர காங்கிரஸ் கூட்டணி அரசும், காவல்துறையும் மை நேம் இஸ் கான் படத்தின் நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், விநியோகஸ்தர் ஆகியோர் பாதிக்கப்படக் கூடாது என்ற ஒரே கவலையுடன் மட்டுமே கடந்த சில நாட்களாக இருந்து வந்தனர்.
இந்தப் படத்துக்கு எந்தப் பிரச்சினையும் வரக் கூடாது என்று ராகுல் காந்தியிடமிருந்து வந்த உத்தரவை அமல்படுத்துவதில்தான் அவர்கள் ஆர்வமாக இருந்தனர்.
இது தீவரவாதிகளுக்கு மிகவும் வசதியாகி விட்டது. இந்த இடைவெளியைப் பயன்படுத்திக் கொண்டு அப்பாவி மக்களின் உயிர்களை அவர்கள் பறித்துக் கொண்டு விட்டனர் என்றார்.
குண்டுவெடிப்பு நடந்த இடத்தை பாஜக செய்தித் தொடர்பாளர் பிரகாஷ் ஜாவேத்கர் நேரில் சென்று பார்வையிட்டார்.
பின்னர் அவர் கூறுகையில், மீண்டும் ஒரு தீவிரவாதத் தாக்குதலை நடத்தியுள்ளனர். இந்த நிலையில் பாகிஸ்தான் அரசுடன் மத்திய அரசு மீண்டும் பேசக் கூடாது. பேச்சுவார்த்தையும், தீவிரவாதமும் இணைந்து செல்ல முடியாது.
இது ஒரு திட்டமிட்ட தீவிரவாதத் தாக்குதல். இப்படிப்பட்ட நிலையில் பேசிக் கொண்டிருப்பதால் என்ன பயன் கிடைத்து விடும் என்றார்.
காங்கிரஸ் கண்டனம்
இந்த நிலையில் பாஜகவின் குற்றச்சாட்டு குறித்து காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஷகீல் அகமது கூறுகையில், அரசியல் கட்சிகள் இதை அரசியலாக்க முனைவது வருத்தத்திற்குரியது.
மிகவும் துயரமான சம்பவம் நடந்துள்ளது. இதை வைத்து யாரும் அரசியல் செய்ய முயலக் கூடாது. தீவிரவாதத்திற்கு எதிரான நாட்டின் போருக்கு இடையூறு ஏற்படும் வகையில் யாரும் செயல்படக் கூடாது.
அனைவரும் ஒற்றுமையுடன் இருக்க வேண்டிய நேரம் இது. ஆனால் சில கட்சிகள் இதில் அரசியல் லாபம் தேட முனைகின்றன, இது வருத்தத்திற்குரியது என்றார் அவர்.












Click it and Unblock the Notifications