கடத்தல் எனக் கருதி பிடிபட்ட 2212 டன் அரிசி தனியாரிடம் ஒப்படைப்பு
தூத்துக்குடி: தூத்துக்குடியில் பிடிப்பட்ட 2212 டன் அரிசி ஆந்திராவில் இருந்து முறையாக கொள்முதல் செய்யப்பட்டது என தெரிய வந்ததை அடுத்து அவற்றை அதற்கு சொந்தமான நிறுவனத்திடம் ஒப்படைக்க கலெக்டர் உத்தரவிட்டார்.
இதுகுறித்து தூத்துக்குடி கலெக்டர் பிரகாஷ் வெளியிட்டுள்ள அறிக்கை..
தூத்துக்குடி ஹரி அன்கோ நிறுவனத்தினர் ஏற்றுமதி செய்யவிருந்த அரிசி மற்றும் அவர்களது குடோனில் இருந்த அரிசி என மொத்தம் 2212 டன் அரிசி சந்தேகத்தின் பேரில் கைப்பற்றப்பட்டது.
இதேபோல் கோரம்பள்ளம் சோரீஸ்புரத்தில் எம்எம்எக்ஸ்போர்ட் நிறுவன குடோனில் இருந்து மாலதீவுக்கு ஏற்றுமதி செய்யப்படவிருந்த 212 டன் அரிசியும் கைப்பற்றப்பட்டது.
சென்னை உணவு பொருள் வழங்க துறை ஆணையர் அலுவலக சிறப்பு குழுவினர் ஆந்திரா மாநிலம் சென்று அரிசி கொள்முதல் செய்யப்பட்டது தொடர்பான பதிவேடுகள் மற்றும் ஆவணங்களை ஆய்வு செய்ததில் இந்த அரிசி ஆந்திரா மாநிலத்தில் கொள்முதல் செய்தது உண்மைதான் என தெரிய வந்ததை அடுத்து உரியவர்களிடம் அரிசியை ஓப்படைக்க நுகர்பொருள் வாணிப கழகத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இருந்தாலும் தமிழ்நாடு அரிசி இருப்பு காட்டுபாட்டு ஆணையை மீறிய குற்றத்துக்காக ஹரி அன்கோ நிறுவனத்துக்கு 2 லட்சமும், எம்எம் எக்ஸ்போர்ட் நிறுவனத்துக்கு 1 லட்சமும் அபராதம் விதிக்கப்பட்டது.
இனி வரும் காலங்களில் இன்றியமையா பண்டங்கள் இருப்பு கட்டுபாட்டு ஆணையின் படி ஒரு மாதத்திற்கு மேல் 100 டன் அரிசி இருப்பில் வைக்கும் கிடங்கு உரிமையாளர் மாவட்ட கலெக்டருக்கு தெரிவித்து உரிய ஆவணங்கள் பெற்ற பின்னர்தான் வெளிநாடுகளுக்கோ, வேறு நிறுவனங்களுக்கோ அனுப்ப வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications