புனே குண்டுவெடிப்பு எதிரொலி- நாடு முழுவதும் உஷார் நிலை

புனேவில் நேற்று ஜெர்மன் பேக்கரிக் கடையில் நடந்த குண்டுவெடிப்பில் 9 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. கிட்டத்தட்ட 14 மாதங்களுக்குப் பிறகு நடந்துள்ள முதல் தீவிரவாதத் தாக்குதல் இது.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து நாடு முழுவதும் உஷார்படுத்தப்பட்டுள்ளது.
தலைநகர் டெல்லி பலத்த பாதுகாப்பு வளையத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. நோய்டா, பரீதாபாத், குர்கான், காஜியாபாத் ஆகிய டெல்லியின் எல்லைகளில் உள்ள நகரங்களிலும் பாதுகாப்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.
டெல்லிக்கு வரும் வாகனங்கள் அனைத்தும் தீவிரமாக சோதனையிடப்படுகின்றன.
இதேபோல மகாராஷ்டிரா, கோவா இடையிலான எல்லைகள் சீல் வைக்கப்பட்டுள்ளன. இரு மாநிலங்களிலும் உள்ள அனைத்து மாவட்ட எஸ்.பிக்களும் உஷார் நிலையில் இருக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவாவில் வசந்த விழா நடைபெறவுள்ளதால் அங்கும் பலத்த பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் உள்ள முக்கிய நிலைகள், விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள், வணிக வளாகங்கள், அரசு அலுவலக வளாகங்கள், வழிபாட்டுத் தலங்கள் என முக்கிய இடங்கள் அனைத்தும் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் வைக்கப்பட்டுள்ளன.
சென்னையில்...
சென்னையில் நேற்றிரவு முதல் போலீஸ் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. சென்னை நகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவின் பேரில் நேற்றிரவு போலீசார் விடிய விடிய ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். சோதனைச் சாவடி மையங்களில் வாகனங்கள் அனைத்தும் கடும் சோதனைக்கு ஆளாக்கப்பட்டன.
இது தவிர நகரில் உள்ள விடுதிகள், ஓட்டல்கள், வழிபாட்டுத்தலங்கள் ஆகியவற்றில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபடுத்தப்பட்டனர்.
மக்கள் அதிக அளவில் கூடும் சென்ட்ரல் ரெயில் நிலையம், எழும்பூர் ரெயில் நிலையம், கோயம்பேடு மத்திய பேருந்து நிலையம் ஆகியவற்றில் தீவிர கண்காணிப்பில் போலீசார் ஈடுபட்டு உள்ளனர்.
வணிக வளாகங்களான ஸ்பென்சர் பிளாசா, சிட்டி சென்டர், ஸ்கைவாக், அபிராமி மால் உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
ரெயில் நிலையத்திற்கு வரும் பயணிகள் தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர். அவர்களது உடமைகள் கடுமையான பரிசோதனைக்கு பின்னரே எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுகிறது.
மாநில ரெயில்வே போலீஸ் சார்பில் நிறுவப்பட்டுள்ள 32 கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படை சார்பில் வைக்கப்பட்டுள்ள 46 கேமராக்கள் மூலம் பயணிகள் நடமாட்டம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
புனே நகரில் வெளிநாட்டினரை குறி வைத்து நடத்தப்பட்ட குண்டு வெடிப்பு சம்பவம் என்பதால் சென்னையில் வெளிநாட்டினர் அதிகம் தங்கும் நட்சத்திர ஓட்டல்களில் பாதுகாப்பை பலப்படுத்தும்படி அதன் நிர்வாகங்களுக்கு போலீஸ் அதிகாரிகள் வலியுறுத்தி உள்ளனர்.
பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து சென்னை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் கூறுகையில், புனே குண்டு வெடிப்பு சம்பவத்தையடுத்து உடனடியாக நகரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. காதலர் தின பாதுகாப்பு பணிக்காக ஈடுபடுத்தப்பட்ட காவலர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்தில் இருந்து 3 ஆயிரமாக உயர்த்தப்பட்டு உள்ளன.
ஐ.டி. பார்க், தி.நகர், பூக்கடை, ரெயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள், வணிக வளாகங்கள், வழிபாட்டு தலங்கள், பொதுமக்கள் கூடும் இடங்களில் போலீசாரின் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன என்றார்.
இதேபோல, சென்னை விமான நிலையத்தில் வழக்கத்தை விட கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. விமான நிலையத்தை சுற்றிலும் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
தமிழகத்தில்...
இதேபோல தமிழகத்தின் முக்கிய நகரங்களான கோவை, மதுரை, திருநெல்வேலி ஆகிய நகரங்களிலும் பாதுகாப்பு மற்றும் உஷார் நிலை அதிகரிக்கப்பட்டுள்ளது.
கோவையில் இன்று தொடர் குண்டுவெடிப்பு நினைவு தினம் என்பதால் கூடுதல் விழிப்புணர்வுடன் போலீஸார் வைக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications