10 டி.ஆர்.எஸ். எம்.எல்.ஏக்களின் ராஜினாமாவை ஏற்றார் ஆந்திர சபாநாயகர்

நேற்று இரவு தெலுங்கு தேசம் கட்சியின் எம்.எல்.ஏ ஒருவரது ராஜினாமா ஏற்கப்பட்டது. இதுவரை மொத்தம் 11 எம்.எல்.ஏக்களின் ராஜினாமாக் கடிதங்கள் ஏற்கப்பட்டுள்ளன.
தெலுங்கானா விவகாரம் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள ஸ்ரீகிருஷ்ணா கமிட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து தெலுங்கானாவைச் சேர்ந்த பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 15 எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்து சபாநாயகரிடம் கடிதம் கொடுத்திருந்தனர்.
அவர்களில் நேற்று இரவு தெலுங்கு தேசத்தைச் சேர்ந்த ஒரு எம்.எல்.ஏவின் கடிதம் ஏற்கப்பட்டது. இன்று 10 பேரின் ராஜினாமாக்கள் ஏற்கப்பட்டன.
2 காங்கிரஸ், பாஜக, பிரஜா ராஜ்ஜியம் கட்சியைச் சேர்ந்த தலா ஒருவர் ஆகியோரின் ராஜினாமாக் கடிதங்கள் மீது சபாநாயகர் இன்னும் முடிவு ஏதும் எடுக்கவில்லை.
ஆளுநர் உரையைத் தடுக்க முயற்சி
இந்த நிலையில், ஆந்திர மாநில சட்டசபையின் கூட்டுக் கூட்டம் இன்று ஆளுநர் உரையுடன் தொடங்கியது. அப்போது ஆளுநர் உரையை படிக்காமல் தடுக்க தெலுங்கு தேசம் மற்றும் ஆளும் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்கள் முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆளுநர் நரசிம்மன் இன்று காலை சபை கூடியதும் உரையைப் படிக்கத் தயாரானார். அப்போது தெலுங்கானாவைச் சேர்ந்த காங்கிரஸ் உறுப்பினர்கள் எழுந்து தெலுங்கானா வேண்டும் என்று எழுதப்பட்ட தட்டிகளுடன் கோஷமிட ஆரம்பித்தனர். மேலும் ஜெய் தெலுங்கானா என்றும் கோஷமிட்டனர்.
இதையடுத்து தெலுங்கு தேசம் உறுப்பினர்கள் எழுந்து ஒருங்கிணைந்த ஆந்திராவே நீடிக்க வேண்டும் என்று பதில் கோஷம் போட்டனர்.
இதனால் அங்கு அமளி நிலவியது. ஆளுநரால் உரையைப் படிக்க முடியவில்லை. இருப்பினும் மற்ற உறுப்பினர்கள் புகுந்து இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தியதைத் தொடர்ந்து அமைதி திரும்பி ஆளுநர் உரையை வாசிக்க ஆரம்பித்தார்.
ஆளுநர் உரையில் தெலுங்கானா விவகாரம் தொடர்பாக எந்த வார்த்தையும் இடம் பெறவில்லை. மாறாக அரசின் வளர்ச்சித் திட்டங்களைப் பற்றி மட்டுமே கூறப்பட்டிருந்தது.
முன்னதாக தெலுங்கானாவைச் சேர்ந்த தெலுங்குதேசம் எம்.எல்.ஏக்கள் ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.
உஸ்மானியாவில் பெரும் மோதல்
இந்த நிலையில், உஸ்மானியா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று மாலை நடந்த தெலுங்கானா ஆதரவு போராட்டத்தில் பெரும் வன்முறை வெடித்தது.
மாணவர்களுக்கும் போலீசாருக்கும் ஏற்பட்ட சண்டையில் பத்திரிகையாளர்கள் மற்றும் பாதுகாப்பு படையினர் உட்பட 22 பேர் படுகாயமடைந்தனர்.
தனி தெலுங்கானா விவகாரத்துக்கு தீர்வு காண்பதற்காக மத்திய அரசு அமைத்துள்ள கமிட்டியை தெலுங்கானா ஆதராவாளர்கள் ஏற்க மறுத்ததை அடுத்து ஹைதராபாத் உள்ளிட்ட தெலுங்கானா பகுதிகள் மீண்டும் போராட்டக்களமாக மாறியுள்ளன.
ஹைதராபாத்தில் உள்ள உஸ்மானியா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று மாலை மாணவர்கள் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பாதுகாப்புக்காக ஏராளமான போலீசாரும், பாதுகாப்புப் படையினரும் நிறுத்தப்பட்டிருந்தனர்.
அப்போது திடீரென மாணவர்கள் கூட்டத்தில் இருந்து போலீசாரை நோக்கி கற்களை வீசி தாக்கினர். இதையடுத்து கூட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் தடியடி நடத்தினர்.
இதனால் இருதரப்பினர் இடையேயும் கடுமையான மோதல் ஏற்பட்டது. பின்னர் பாதுகாப்புப் படையினர் கண்ணீர் புகைகுண்டு மற்றும் ரப்பர் புல்லட்டுகளை பயன்படுத்தி மாணவர்களின் கூட்டத்தை களைத்தனர்.
தடை செய்ப்பட்ட பல்கலைக் கழக வளாகத்தில் மாணவர்கள் அனுமதியின்றி போராட்டம் மற்றும் ஊர்வலம் நடத்த முயன்றதால் தடியடி மற்றும் ரப்பர் குண்டால் துப்பாக்கிச் சூடு நடத்தினோம் என்று போலீஸ் கமிஷனர் ஏ.கே.கான் தெரிவித்தார்.
இந்த மோதலில், அப்பகுதியில் செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரிகையாளர்கள் மற்றும் புகைப்படக்காரர்கள் ஐந்து பேர் உட்பட மொத்தம் 22 பேர் படுகாயமடைந்தனர்.












Click it and Unblock the Notifications