பணக்காரர்களுக்கு தனி கோர்ட் - அரசு திட்டம் - எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு

2009ம் ஆண்டு நிலவரப்படி நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள் 3 கோடியை தாண்டும்.
தொழில் துறையில் சட்ட ரீதியான இணக்கமான சூழல் இந்தியாவில் மிகவும் மோசமாக இருப்பதாக உலக வங்கி அறிக்கையும் ஏற்கனவே சுட்டிக்காட்டியது.
தொழில் நிறுவனங்களுக்கு இணக்கமான சட்டச்சூழல் நிலவும் நாடுகள் வரிசையில் இந்தியாவுக்கு 122ம் இடமே கிடைத்துள்ளது.
இந்நிலையை மாற்றுவதற்கு, ரூ.5 கோடி மற்றும் அதற்கு மேற்பட்ட மதிப்புடைய பொருளாதார குற்ற வழக்கு விவகாரங்களை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க அரசு திட்டமிட்டது.
இதற்கென உயர்நீதிமன்றங்களின் வணிகப் பிரிவுகள் சட்டமசோதா 2009ஐ மத்திய அரசு உருவாக்கியுள்ளது.
இம்மசோதா குறித்து ராஜ்யசபா தேர்வுக் குழு ஆராய்ந்து வருகிறது. ஆனால் இடதுசாரிகள் மற்றும் பாஜகவினர், எவ்வாறு நீதிமன்றங்களை ஏழைகளுக்கும், பணக்காரர்களுக்கும் என பிரித்து நடத்த முடியும் என கேள்வி எழுப்பியுள்ளனர்.
மேலும், இந்த சட்டமசோதா சில அடிப்படை உரிமைகளை மீறுவதற்கு வழி வகுக்கும் என்றும் சட்ட நிபுணர்கள் கூறி வருகின்றனர்.
ஆனால், இதில் எந்த பாரபட்சமும் கிடையாது என மத்திய சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி கூறி வருகிறார்.
'சர்வதேச அளவில் நம்நாடு சட்டச்சூழல் சரியில்லாத நாடுகள் பட்டியலில் இடம் பெறுகிறது. முதலீட்டாளர்களை கவராத நாடு என்றும், வழக்குகள் விரைந்து முடிக்கப்படாத நாடு என்றும் இந்தியாவை மதிப்பிடுகிறார்கள். எனவே இந்த நிலையை மாற்ற இதுபோன்ற முயற்சிகள் அவசியம்' என்கிறார் வீரப்ப மொய்லி.
ஆனால் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சர்ச்சைக்குரிய, நீதிபதிகள் சொத்து விவரம் தாக்கல் செய்வது தொடர்பான மசோதாவை பலத்த எதிர்ப்பு காரணமாக கைவிட்டது போலவே இந்த சட்டத்தையும் அமைச்சர் கைவிட வேண்டியிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications