எனது பிறந்த நாளில் மக்களுக்கு உதவி செய்யுங்கள், ரத்ததானம் செய்யுங்கள் - ஜெ.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை:
அண்ணாவின் கூற்றுப்படி, ஆளும் கட்சியினால் மக்களுக்கு ஏற்படும் அவலங்களை, துன்பங்களை, துயரங்களை எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் எடுத்துரைத்தால், அவற்றை தீர்க்க நடவடிக்கை எடுக்காமல், கேலியும், கிண்டலும் செய்வதையே தொழிலாக கொண்டுள்ளது திமுக அரசு.
எதையும் விலைக்கு வாங்கிவிடலாம் என்ற மமதையில், அதிகார தோரணையில் கருணாநிதி நடந்து கொண்டு இருக்கிறார். இந்த நான்கு ஆண்டு கால திமுக ஆட்சியில் ஜனநாயகம் உருக்குலைக்கப்பட்டிருக்கிறது; ஜனநாயகம் செத்து மடிந்து விட்டது.
அனைத்து துறைகளிலும் தமிழ்நாடு அழிவுப் பாதையில் சென்று கொண்டிருக்கின்ற இந்தத் தருணத்தில், தமிழக மக்கள் இருளில் தத்தளித்துக் கொண்டிருக்கின்ற இந்தச் சூழ்நிலையில், என்னுடைய பிறந்த நாளன்று ஆடம்பரமான, மகிழ்ச்சிகரமான கொண்டாட்டங்களை நடத்த வேண்டாம் என்று தொண்டர்களை அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.
என்னுடைய பிறந்த நாளன்று என்னைச் சந்திப்பதற்காக வருவதைத் தவிர்த்து, ஏழை மக்களின் வாட்டத்தை சிறிதளவாவது போக்கும் வகையில், அவர்களுக்கு உதவிடும் வகையில், பொருளுதவி, மருத்துவ உதவி, அன்னதானம், ரத்ததானம் போன்ற நற்காரியங்களில் தொண்டர்கள் ஈடுபட்டால் அது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தரும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
கலைத்துறையில் அரசியல் புகுந்தால் ஆமை புகுந்த வீடாக திரைப்படத் துறை மாறிவிடும் என்று ஒன்றுமே தெரியாதது போல் கருணாநிதி பேசியிருக்கிறார். இதுவே மாய்மாலத்தின் உச்சகட்டம். கலைத் துறையில் மட்டுமல்ல, அனைத்துத் துறைகளிலும் கருணாநிதி குடும்பத்தைச் சேர்ந்த அரசியல் ஆமைகள் புகுந்து விட்டதால் தான் தமிழகமே ஆமை புகுந்த வீடாக, இந்தியாவின் இருண்ட பகுதியாக தற்போது மாறி விட்டது.
திமுக ஆட்சியின் நிர்வாக திறமை யின்மை காரணமாக அத்யாவசியப் பொருட்களான அரிசி, சர்க்கரை, பருப்பு, சமையல் எண்ணெய் ஆகிய வற்றின் விலைகள் விஷம்போல் ஏறிக்கொண்டே போகின்றன என்றும் இதன் காரணமாக ஏழை, எளிய, நடுத்தர மக்கள் வெகுவாக அல்லல் படுகின்றனர்.
மின்வெட்டு இல்லை என்று அரசு அறிவித்தாலும், மின் வெட்டு தமிழகம் முழுவதும் நீடித்துக் கொண்டுதான் இருக்கிறது. மின்வெட்டு காரணமாக விவசாயிகள், தொழிற்சாலையை நடத்துபவர்கள், மாணவ, மாணவிகள், நோயாளிகள், முதியவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றனர். சட்டம்-ஒழுங்கு மேலும் மேலும் சீர்குலைந்து சீரழிந்து கொண்டிருக்கிறது.
இந்த நிலை அகன்று, அதிமுக ஒளிமயமான பொற்கால ஆட்சி மலரும் நாள் விரைவில் வரும் என்பதை சொல்லி, அந்த நாளே நாம் மகிழ்ச்சிகரமான கொண்டாட்டங்களை கொண்டாட உகந்த நாள் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.












Click it and Unblock the Notifications