புனே குண்டுவெடிப்பில் வெளிநாட்டு சதியும் இருக்கலாம்- ஜி.கே.பிள்ளை
டெல்லி: புனே குண்டுவெடிப்புக்கு வெளிநாட்டு சதி காரணமல்ல என்று கூறி விட முடியாது. குறிப்பாக டேவிட் ஹெட்லியின் தொடர்புகளை மறுக்க முடியாது என்று மத்திய உள்துறை செயலாளர் ஜி.கே.பிள்ளை கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், நிச்சயம் ஹெட்லிக்கு இதில் தொடர்பு இருக்கிறது. அவர் ஏற்கனவே வந்து வேவு பார்த்த இடம் குண்டுவெடிப்பு நடந்த இடத்திற்கு அருகில் உள்ள ஓஷோ மையமாகும். எனவே ஹெட்லிக்கும், இந்த சம்பவத்திற்கும் தொடர்பு இல்லை என்று கூறுவது கடினம்.
ஐ.எஸ்.ஐ.யால் திட்டமிட்டுக் கொடுக்கப்பட்ட தீவிரவாத தாக்குதல் திட்டமான கராச்சித் திட்டம் குறித்து ஹெட்லி பேசியுள்ளார். கீழ் இந்தியாவிலிருந்து இளைஞர்களைத் தேர்வு செய்து பாகிஸ்தானுக்கு அனுப்பி பயிற்சி கொடுத்து இந்தியாவில் தீவிரவாத செயல்களில் ஈடுபட வைப்பதே கராச்சி திட்டமாகும்.
இவையெல்லாம் சாத்தியக் கூறுகள். தற்போது விசாரணை தொடக்க அளவில்தான் உள்ளது. முழுமையாக முடிய வேண்டும். இந்தியன் முஜாஹிதீன் போன்றவர்களை வெளிநாட்டில் உள்ள தீவிரவாத அமைப்புகள் முன்பு கூட தீவிரவாத செயல்களுக்குப் பயன்படுத்தியுள்ளன. தற்போதும் அதுபோலவே நடந்திருக்கலாம்.
எனவே புனே குண்டுவெடிப்புச் சம்பவத்தில் வெளிநாட்டின் சதி இடம் பெற்றிருக்கலாம் என்ற கருத்தை நிராகரிக்க முடியாது. அந்த சதியாளர் யார் என்பதை அறிய காலம் பிடிக்கும் என்றார் பிள்ளை.












Click it and Unblock the Notifications