எஸ்.பி வேடம் போட்டு மோசடி-சாருலதா மீது புகார்கள் குவிகின்றன

சென்னை விருகம்பாக்கம் இரட்டை பிள்ளையார் கோவிலை சேர்ந்தவர் சாருலதா. இவர் ஐ.பி.எஸ். அதிகாரி வேடத்தில் பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டதாக கடந்த வாரம் கைது செய்யப்பட்டார்.
போலீஸ் வேலை வாங்கித் தருவதாகவும், சப்-இன்ஸ்பெக்டர் வேலை வாங்கி தருவதாகவும் சொல்லி, அப்பாவி இளைஞர்களை ஏமாற்றி லட்சக்கணக்கில் பணம் மோசடி செய்துள்ளார் சாருலதா.
இதுதொடர்பாக புகார்கள் குவிந்தவண்ணம் உள்ளன. கும்மிடிப்பூண்டியை சேர்ந்த சங்கர் என்ற இளைஞரிடம், சப்-இன்ஸ்பெக்டர் வேலை வாங்கி தருவதாக ரூ.6 லட்சம் வாங்கி ஏமாற்றியுள்ளார். இதேபோல 9 பேரிடம் ரூ.17 லட்சம் வரை மோசடி செய்ததாக சாருலதா மீது புகார் கூறப்பட்டது.
இதன் அடிப்படையில் வண்ணாரப்பேட்டை போலீசார் மோசடி, ஆள்மாறாட்டம் உள்பட 4 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சாருலதாவை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். சாருலதாவின் கார் டிரைவர் திலீப்குமாரும் கைதானார்.
இந்த நிலையில் நேற்று காலையில் போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனை சந்தித்து 5 இளைஞர்கள், சாருலதா மீது புகார் கொடுத்தனர்.
காஞ்சீபுரத்தை சேர்ந்த அன்பு என்பவர் சப்-இன்ஸ்பெக்டர் வேலைக்காக சாருலதாவிடம் ரூ. ஒன்றரை லட்சம் கொடுத்து ஏமாந்துள்ளார். திருச்சி அருகேயுள்ள தொட்டியத்தை சேர்ந்த எம்.எஸ்சி., பட்டதாரியான அசோக் குமார் என்பவர், சப்-இன்ஸ்பெக்டர் வேலை கேட்டு ரூ.3 லட்சம் கொடுத்துள்ளார். சென்னையை சேர்ந்த மோகன சுந்தரம் என்பவரும் ரூ.2 லட்சத்தை இழந்துள்ளார்.
நாமக்கல்லை சேர்ந்த தனசீலன் ரூ. ஒன்றரை லட்சமும், திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டை சேர்ந்த லோகநாதன் ரூ.50 ஆயிரத்தையும் பறிகொடுத்துள்ளனர்.
லோகநாதன் கூறுகையில், நான் பிளஸ்-2 படித்துள்ளேன். போலீஸ் வேலைக்கான எழுத்து தேர்வில் நான் பாஸ் ஆகிவிட்டேன். இந்த நிலையில், கபடி போட்டி ஒன்றில் சாருலதாவை சந்தித்தேன். அவர் ரூ.1 லட்சம் கொடுத்தால் போலீஸ் வேலை வாங்கி தருவதாக கூறினார்.
சென்னை ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் போலீஸ் தேர்வு நடந்தபோது சாருலதாவும், உயர் போலீஸ் அதிகாரியோடு காணப்பட்டார். எனவே அவரை நம்பி முதல்கட்டமாக ரூ.50 ஆயிரம் கொடுத்தேன். உடனே கையில் வேலைக்கான ஆர்டரையும் கொடுத்தார். அது போலியானது என்று பின்னர் தெரிய வந்தது என்று என்றார்.
இதிலிருந்து போலியான வேலை நியமனக் கடிதங்களையும் தானே தயாரித்து ஏமாற்றியுள்ளார் சாருலதா என்பது தெரிய வருகிறது.
சாருலதாவுக்கு ஒரு போலீஸ் உயர் அதிகாரி மிகவும் உதவியாக இருந்துள்ளது தெரிய வந்துள்ளது. ஐ.பி.எஸ். அதிகாரிக்கான போலி அடையாள அட்டையை தயாரிப்பதற்கு அவர் உடந்தையாக இருந்ததாக தெரியவந்துள்ளது.
சென்னை ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் போலீஸ் தேர்வு நடந்த போது, சாருலதாவும் அங்கு வந்துள்ளார். குறிப்பிட்ட உயர் அதிகாரியை அங்கே அவர் சந்தித்து பேசியுள்ளார். எனவே அவரையும் விசாரணைக்குக் கொண்டு வர திட்டமிட்டு வருகிறது காவல்துறை.
சாருலதாவை விரைவில் போலீஸ் காவலில் எடுத்து முறைப்படி விசாரிக்கவுள்ளனர். அப்போது மேலும் பல விவகாரங்கள் தெரிய வரும் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications