போர்க்குற்றம் தொடர்பான ஆதாரங்கள் - ஏற்கனவே யு.எஸ்.சிடம் கொடுத்து விட்டார் பொன்சேகா?

இதுகுறித்து அந்த செய்தியில் கூறியிருப்பதாவது...
கடந்த அக்டோபர் மாதம் 24 ஆம் தேதி அமெரிக்காவுக்கு சென்றிருந்த முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகா அந்நாட்டு வெளியுறவு அமைச்சகத்திற்குச் சென்று இலங்கை அரசின் போர்க்குற்றங்கள் உட்பட இறுதிக்கட்ட போரில் இடம்பெற்ற பல்வேறு சம்பவங்கள் அடங்கிய ஆவணம் ஒன்றை அமெரிக்க அதிகாரிகளிடம் சமர்ப்பித்திருந்தார் என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சக வட்டாரங்களை மேற்கோள்காட்டி தகவல் கசிந்துள்ளது.
இந்த சந்திப்புக்களில் போது, இலங்கைப் படைகள் வன்னியில் மேற்கொண்ட போர்க் குற்றங்கள், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு என்ன நடந்தது? விடுதலைப்புலிகளின் மூத்த தலைவர்கள் பலருக்கு என்ன நடந்தது? விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் வன்னியில் நிலை கொண்டிருந்த படையணிகளின் விவரங்கள் உட்பட பல முக்கிய விவரங்கள் அடங்கிய ஆவணம் ஒன்றை பொன்சேகா அமெரிக்க அதிகாரிகளிடம் கொடுத்துள்ளார் என அந்த செய்தி கூறுகிறது.
இந்த சந்திப்புக்களை முடித்துக் கொண்டு நவம்பர் 4 ஆம் தேதி நாடு திரும்பிய பொன்சேகா, கொழும்பில் அமெரிக்க தூதுவர் பட்ரீசியாவை சந்தித்து ரகசிய பேச்சு நடத்தினார். இந்த சந்திப்பு தொடர்பான விவரங்கள் வெளியிடப்படவில்லை.
அமெரிக்காவில் வெளியுறவு அதிகாரிகளுடன் நடத்திய பேச்சுக்களின்போது விவாதிக்கப்பட்டபடியே, நவம்பர் 12 ஆம் தேதி கூட்டுப் படைத் தலைவர் பதவியிலிருந்து பொன்சேகா ராஜினாமா செய்துகொண்டார் என்றும் அதன் பின்னர் அதிபர் தேர்தலில் போட்டியிடப்போவதாக அறிவித்தார் என்றும் பொன்சேகாவை எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக ஏற்றுக் கொள்ளும்படி ஐக்கிய தேசிய கட்சிக்கு அமெரிக்க தரப்பிலிருந்து அறிவுறுத்தப்பட்டதாகவும் கூட அந்த தகவல்கள் கூறுகின்றன.
ஆனால் இது எது குறித்தும் சிங்கள ஊடகங்கள் செய்தி வெளியிடவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
தனது உயிருக்கு எப்படியும் ஆபத்து ஏற்படலாம் என்று அஞ்சியே, குறிப்பிட்ட சில ஆவணங்களை உரிய அமெரிக்க அதிகாரிகளிடம் ஒப்படைக்க பொன்சேகா உத்தரவிட்டிருக்கலாம் எனவும் நம்பப்படுகிறது. இதன் காரணமாகவே சரத்தின் மருமகனையும் அரசு கைதுசெய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது எனக் கூறப்படுகிறது.
பொன்சேகா மருமகனுக்கு கைது வாரண்ட்..
இந்த நிலையில், பொன்சேகாவின் மருமகன் தனுனா திலகரத்னேவைக் கைது செய்ய பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தனுனாவுக்கு சொந்தமான நிறுவனம், ராணுவத்துக்கு ஆயுத கொள்முதல் காண்டிராக்ட் பெற்று, பல லட்ச ரூபாய் ஊழல் செய்ததாக வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இதை விசாரித்த கொழும்பு கோட்டை கோர்ட், தனுனா திலகரத்னேக்கு கைது வாரண்ட் பிறப்பித்து நேற்று உத்தரவிட்டது.
கொழும்பு நகரில் ஒரு தனியார் வங்கியில், தனுனா திலகரத்னேவின் தாயார் பெயரில் உள்ள லாக்கரில் ரூ. ஒன்றரை கோடி இலங்கைப் பணமும், அமெரிக்க பணம் ஐந்தரை லட்சம் டாலரும் போடப்பட்டுள்ளதாக போலீஸ் சிஐடி தகவல் தெரிவித்துள்ளது.
விரைவில் பொன்சேகாவின் மருமகனையும் பிடித்து இலங்கை அதிகாரிகள் சிறையில் தள்ளுவார்கள் எனத் தெரிகிறது.
ராஜபக்சேவின் வெற்றியை எதிர்த்து மனு:
இதற்கிடையே, நடந்துமுடிந்த அதிபர் தேர்தலில் ராஜபக்சே வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்கக்கோரி பொன்சேகா சார்பில் உச்சநீதிமன்றத்தில் இன்று மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
பொன்சேகா சார்பில் அவரின் வக்கீல்கள் தாக்கல் செய்துள்ள அம்மனுவில், ராஜபக்சே, தேர்தல் ஆணையர் தயானந்த திசநாயகே உட்பட 20 பேருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இவர்கள் அனைவரும் சேர்ந்து தேர்தலில் முறைகேடுகள் நடத்தியிருப்பதாக பொன்சேகா தரப்பில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications