அதிமுக ஆட்சியில் கரும்புக்கான ஆதார விலை உயர்த்தப்படாதது ஏன்? ஜெ. விளக்கம்
சென்னை: உச்சநீதிமன்றம் தடை பிறப்பித்திருந்த காரணத்தால்தான் எனது ஆட்சியில், 2004ம் ஆண்டு வரை கரும்புக்கான ஆதார விலை உயர்த்தப்படாமல் இருந்தது என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
கரும்பு விவசாயிகளுக்கான ஆர்ப்பாட்டம் குறித்து 5.2.2010 அன்று நான் வெளியிட்ட அறிக்கையினை முழுவதுமாக படிக்காமல் ஓர் அறிக்கையை கருணாநிதி வெளியிட்டிருக்கிறார்.
2004 ஆம் ஆண்டு வரை எனது ஆட்சிக்காலத்தில் கரும்புக்கான ஆதார விலை உயர்த்தப்படவில்லை என்று கூறுகிறார்.
மாநில அரசு ஆதார விலையை அறிவிக்கக் கூடாது என தென்னிந்திய சர்க்கரை ஆலை அதிபர்கள் சங்கம் சென்னை உயர்நீதிமன்றத்திலும், பின்னர் உச்சநீதிமன்றத்திலும் வழக்கு தாக்கல் செய்து தடையாணை பெற்றிருந்தது.
உண்மை நிலை என்னவென்றால், எனது ஆட்சிக்காலத்தில் எடுக்கப்பட்ட முயற்சியின் காரணமாக, தடையாணை விலக்கிக் கொள்ளப்பட்டதோடு மட்டுமல்லாமல் மாநில அரசு பரிந்துரை விலையை அறிவிக்கலாம் என்ற உத்தரவும் 2004 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்டது.
உச்சநீதிமன்றத் தீர்ப்பினையடுத்து மத்திய அரசின் குறைந்தபட்ச ஆதார விலையான 795 ரூபாயுடன் மாநில அரசின் ஆதார விலையான 219 ரூபாயையும் சேர்த்து கரும்புக்கு டன் ஒன்றுக்கு 1,014 ரூபாய் வழங்க உத்தரவிடப்பட்டது.
இதே போன்று வாகன வாடகையை வழங்கவும் ஆலை நிர்வாகங்கள் கேட்டுக் கொள்ளப்பட்டன. இதையெல்லாம் கரும்பு விவசாயிகள் நன்கு அறிவார்கள்.
அடுத்தபடியாக 2005-2006 ஆம் ஆண்டு மத்திய அரசு நிர்ணயம் செய்த விலை 795 ரூபாய் என்றும், தமிழக அரசினால் கூடுதலாக ரூ.642.40 சேர்த்து ரூ.1,437.40 வழங்கப்படுவதாகவும் கருணாநிதி அறிவித்திருக்கிறார்.
தமிழக அரசு செய்தி வெளியீடு எண்.647 நாள் 24.9.2009-ல் மத்திய அரசு சட்டப்பூர்வ விலையாக ரூ.1,077.60 என்று அறிவித்துள்ளதாகவும், மாநில அரசின் பரிந்துரை விலையான ரூ.359.80-ஐயும் சேர்த்து ஒரு டன் கரும்புக்கு ரூ.1,437.40 வழங்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
அதாவது மத்திய அரசின் ஆதார விலை 1,077.60 என்றும், மாநில அரசின் ஆதார விலை ரூ.359.80 என்றும் தமிழக அரசின் செய்தி வெளியீட்டிலேயே குறிப்பிடப்பட்டிருக்கிறது. மாநில அரசின் ஆதார விலையான ரூ.359.80-ல் எனது ஆட்சிக் காலத்தில் அறிவிக்கப்பட்ட ஆதார விலையான ரூ.219-ம் அடக்கம்.
2005-2006 ஆம் ஆண்டு உற்பத்தி செய்யப்பட்ட சர்க்கரையின் அளவு 21.38 லட்சம் மெட்ரிக் டன்னாக உயர்ந்தது. 2006-2007 ஆம் ஆண்டு உற்பத்தி செய்யப்பட்ட சர்க்கரையின் அளவு 25.39 லட்சம் மெட்ரிக் டன் ஆகும்.
எனது ஆட்சிக்காலத்தில் மேற்கொள்ளப்பட்ட சிறப்பான நடவடிக்கைகள் காரணமாக சர்க்கரை உற்பத்தி 2006-2007 ஆம் ஆண்டு அதிகரித்து இருக்கிறது என்று அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications