மஃப்டி போலீசாரை கட்டி வைத்து உதைத்த கிராம மக்கள்!
புளியங்குடி: புளியங்குடி அருகே மணல் கடத்தலை தடுக்க சென்ற போலீசாரை ஊர்மக்கள் மரத்தில் கட்டி வைத்து அடித்தனர்.
நெல்லை மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே உள்ள நிட்சபேச நதியிலிருந்து அனுமதியின்றி மணல் அள்ளப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து புளியங்குடி டிஎஸ்பி பாஸ்கரன் உத்தரவின் பேரில் போலீசார் பூசைப்பாண்டி, மாணிக்கராஜ், வேலுச்சாமி, சிவலமுத்து ஆகிய 4 பேர் நள்ளிரவு சாதாரண உடையில் பைக்கில் ரோந்து சென்றனர்.
அப்போது நெல்கட்டும்செவலை சேர்ந்த சிலர் டிராக்டரில் மணல் அள்ளிக்கொண்டு ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். இதை பார்த்த போலீசார் அவர்களை பின் தொடர்ந்து விரட்டி சென்றனர்.
ஆனால் அவர்கள் அதற்குள் ஊர் எல்லையை தொட்டு விட்டனர். தங்களை பின் தொடர்ந்து வருவது போலீசார் என தெரியாத அவர்கள் வேறு யாரோ தங்களை விரட்டி வருவதாக ஊருக்குள் சென்று தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து ஊர் மக்கள் திரண்டு வந்து 4 பேரையும் பிடிக்க முயன்றனர். இதில் போலீஸ்காரர்கள் பூசைப்பாண்டி, மாணிக்கராஜ் ஆகியோர் மட்டும் சிக்கிக்கொண்டனர். மற்ற இருவரும் தப்பினர்.
ஆத்திரம் அடைந்த ஊர் மக்கள் பிடிப்பட்ட 2 பேரையும் மரத்தில் கட்டி வைத்து அடித்தனர். அப்போது அவர்கள் நாங்கள் இருவரும் போலீஸ்காரர்கள், அடிக்காதீர்கள் எனக் கூறி சத்தம் போட்டனர் ஆனாலும் மக்கள் விடவில்லை.
அதற்குள்ளாக, தகவல் அறிந்த டிஎஸ்பி பாஸ்கரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று அவர்களை மீட்டனர்.
இச்சம்பவம் தொடர்பாக நெல்கட்டும் செவலை சேர்ந்த 50 பேர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். காயமடைந்த போலீஸ்காரர் சீவலமுத்து வாசுதேவநல்லூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.












Click it and Unblock the Notifications