மின்கசிவால் தீவிபத்து-தப்பி ஓடிய அமைச்சர்
சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில் திடீரென சிறிய அளவிலான தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து மாநில வனத்துறை அமைச்சர் செல்வராஜ் மின்னல் வேகத்தில் அங்கிருந்து ஓடி தப்பித்தார்.
நேற்று அமைச்சர் செல்வராஜ் தனது அறைக்கு வந்து பணிகளைக் கவனிக்க ஆரம்பித்தார். அதிகாரிகளுடன் அவர் பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது அவரது அறை உள்ள 3வது மாடியின் தாழ்வாரத்தின் மூலையில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அங்கு புகைமூட்டமும் ஏற்பட்டது.
அமைச்சர் செல்வராஜின் அறைக்கும் புகை வரத் தொடங்கியது. தீவிபத்து குறித்து அவருக்குத் தெரிய வந்ததும் உடனடியாக அங்கிருந்து வெளியேறிய அமைச்சர் படு வேகமாக மாடிப்படியில் இறங்கி 2வது தளத்திற்கு ஓடி விட்டார்.
தனது ஊழியர்களையும் பத்திரமாக வெளியேறுமாறு கூறியபடி ஓடினார். பின்னர் இன்னொரு அமைச்சரின் அறைக்குப் போய் அமர்ந்தார்.
தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். மின் கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டதாக பின்னர் தெரிவிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications