புனே தாக்குதலுக்கு நாங்களே காரணம்- புதிய தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்பு
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர் இ தொய்பா அல் அலாமி என்ற புதிய தீவிரவாதக் குழு, புனே குண்டுவெடிப்புக்கு நாங்கள்தான் பொறுப்பு என்று கூறியுள்ளது.
ஆங்கில நாளிதழான இந்து பத்திரிக்கைக்கு இந்தத் தகவலை தொலைபேசி மூலம் அந்த அமைப்பின் செய்தித் தொடர்பாளர் என்று கூறிக் கொள்ளும் அபு ஜிந்தால் என்பவர் கூறியுள்ளாராம்.
புனேவில் உள்ள ஜெர்மன் பேக்கரியில் நடந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தில் 10 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தின் பின்னணியில் லஷ்கர் இ தொய்பா, இந்தியன் முஜாஹிதீன், டேவிட் கோல்மேன் ஹெட்லி ஆகியோர் இருப்பதாக பாதுகாப்புப் படையினர் சந்தேகப்படுகின்றனர்.
இந்த நிலையில் இதுவரை அறியப்படாத ஒரு பாகிஸ்தான் தீவிரவாதக் குழு நாங்கள்தான் இதற்குக் காரணம் எனக் கூறியுள்ளது.
அந்த அமைப்பின் பெயர் லஷ்கர் இ தொய்பா அல் அலாமி என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் செய்தித் தொடர்பாளர் என்று கூறிக் கொள்ளும் அபு ஜிந்தால் என்பவர், இந்து நாளிதழ் அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.
அவர் கூறுகையில், பாகிஸ்தானின் பழங்குடியினப் பகுதியான வசிரிஸ்தான் மிரம்ஷா என்ற இடத்திலிருந்து பேசுகிறேன்.
பாகிஸ்தானுடனான பேச்சுவார்த்தையின்போது காஷ்மீர் குறித்துப் பேச இந்தியா தொடர்ந்து மறுத்து வருகிறது. இதனால்தான் புனேவில் குண்டுவெடிப்பை நிகழ்த்தினோம் என்று கூறியுள்ளார்.
அவர் பேசிய தொலைபேசி எண் வசிரிஸ்தான் பிராந்தியத்துக்கான பொதுவான தொலைபேசி கோட் எண்ணுக்கு உட்பட்டதுதான் என்று கூறியுள்ள இந்து நாளிதழ், மீண்டும் அந்த எண்ணைத் தொடர்பு கொண்டபோது, தற்காலிகமாக இந்த எண் உபயோகத்தில் இல்லை என்ற தகவல் வந்ததாக தெரிவித்துள்ளது.
இதற்கு முன்பு லஷ்கர் இ தொய்பா அல் அலாமி என்ற பெயரில் எந்த செய்தியும் வந்ததில்லை. டெல்லியில் உள்ள தீவிரவாத அமைப்புகள் தொடர்பான நிபுணர்களுக்கும் இந்த அமைப்பு குறித்துத் தெரியவில்லை.
ஆனால் தொலைபேசியில் பேசிய அந்த அபு ஜிந்தால் கூறுகையில், லஷ்கர் இ தொய்பா அமைப்பு தற்போது உடைந்து விட்டது. ஐ.எஸ்.ஐயின் உத்தரவுகளுக்கேற்ப லஷ்கர் இ தொய்பா செயல்பட்டு வருவதால் அதிலிருந்து பிரிந்து வந்து விட்டோம் என்று கூறினாராம்.
முன்னதாக அல் கொய்தா அமைப்பைச் சேர்ந்தவரும், இந்தியன் முஜாஹிதீன் அமைப்பின் நிறுவனர்களில் ஒருவருமான இலியாஸ் காஷ்மீரி, பாகிஸ்தான் பத்திரிக்கையாளர் ஒருவருக்கு, புனே குண்டுவெடிப்புக்கு நாங்களே பொறுப்பு என்று கூறி இமெயில் அனுப்பியிருந்தார்.
இந்த நிலையில் தற்போது புதிய தீவிரவாத அமைப்பு நாங்கள்தான் பொறுப்பு என்று கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications