நடிகர் ஜெயராம் வீட்டுக்குப் பாதுகாப்பு இருந்த ஏட்டு மர்ம சாவு
சென்னை: நடிகர் ஜெயராம் வீட்டு பாதுகாப்புப் பணியில் இருந்த தலைமைக் காவலர் மர்மமான முறையில் அவரது வீட்டில் இறந்து கிடந்தார்.
சென்னை ஆயுதப்படை போலீசில் ஏட்டாக இருந்தவர் மரிய ஜோசப்(45). புதுப்பேட்டை ஆயுதப்படை போலீஸ் குடியிருப்பில் குடும்பத்தோடு வசித்து வந்தார். இவரது மனைவி பெயர் தெரசம்மாள். பெண் குழந்தை ஒன்று உள்ளது.
தெரசம்மாள் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர். மகளுடன் தெரசம்மாள் ஊருக்குப் போயிருந்தார். மரியஜோசப் மட்டும் வீட்டில் இருந்தார்.
சில நாட்களாக நடிகர் ஜெயராமின் தனிப்பட்ட பாதுகாப்பு பணியில் மரிய ஜோசப் ஈடுபட்டிருந்தார். கடந்த 13-ந் தேதி ஜெயராம் கேரளா போய் விட்டார். இதனால் பாதுகாப்பு பணியிலிருந்து ஏட்டு மரியஜோசப் விடுவிக்கப்பட்டார். வழக்கமான பணியில் இருந்தார்.
இந்த நிலையில் நேற்று மாலை ஊரிலிருந்து மரிய ஜோசப்பின் மனைவி அவருக்கு செல்போனில் பேசினார். ஆனால் அவர் போனை எடுக்கவில்லை. இதனால் வீட்டுக்கு அருகில் உள்ள பழக்கடைக்கு போன் செய்து மரியஜோசப்பை தன்னிடம் பேசச் சொல்லும்படி அவரது மனைவி தெரிவித்தார். பழக்கடைக்காரர் வீட்டுக்கு சென்று பார்த்த போது வீடு உள்பக்கம் பூட்டியபடி கிடந்தது.
வீட்டுக்குள்ளிருந்து துர்நாற்றம் வந்தது. ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்த போது ஏட்டு மரிய ஜோசப் படுக்கையில் மல்லாந்த நிலையில் பிணமாக கிடந்ததைப் பார்த்த பழக்கைடைக்காரர் அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர் எழும்பூர் போலீஸாருக்குத் தகவல் கொடுத்தார். உடனடியாக உதவி கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி, சப்-இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.
மரியஜோசப்பின் பிணம் அழுகிப் போயிருந்தது. 14-ந் தேதி மாலை கடைசியாக அவரை அக்கம் பக்கத்தினர் பார்த்துள்ளனர். எனவே அன்று இரவுதான் அவர் இறந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
மரியஜோசப் கடும் மாரடைப்பு ஏற்பட்டு இறந்திருக்கலாம் என்று தெரிகிறது. தற்கொலை செய்ததற்கான அடையாளம் எதுவும் தெரியவில்லை என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications