நியூசிலாந்தில் ராகுல்-கிரிக்கெட் வீரர்கள் அச்சமின்றி இந்தியா வர அழைப்பு
வெலிங்டன்: ஹூஜி தீவிரவாதிகள் விடுத்துள்ள எச்சரிக்கையால் நியூசிலாந்து வீரர்கள் அச்சமடையத் தேவையில்லை. இந்தியாவில் அவர்களுக்கு முழு பாதுகாப்பு கிடைக்கும் என்று கூறியுள்ளார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி.
ராகுல் காந்தி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு அவர் தொழிலாளர் கட்சியின் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் கிறிஸ் கார்ட்டரை சந்தித்துப் பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், இந்தியாவுக்கு வரும் அனைத்து சர்வதேச வீரர்களுக்கும் தேவையான பாதுகாப்பை இந்திய அரசு வழங்கும் என்றார்.
ராகுல் காந்தியுடனான சந்திப்பு குறித்து கார்ட்டர் கூறுகையில், இந்தியாவில் பாதுகாப்பு நிலைமை குறித்து ராகுல் காந்தியிடம் விவாதித்தேன். மிரட்டல்களின் தொணி மற்றும் விளைவுகள் குறித்து இந்திய அரசு முழுமையாக உணர்ந்துள்ளதாக ராகுல் தெரிவித்தார். மேலும், போதுமான பாதுகாப்பை உறுதி செய்யத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் அவர் உறுதியளித்தார்.
சமீபத்தில் இந்தியாவில் நடந்த தீவிரவாதத் தாக்குதல்கள் மூலம், தீவிரவாதிகள் விடுக்கும் எச்சரிக்கைகளை தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற உணர்வு ஏற்படுகிறது.
இருப்பினும் இந்திய அரசு நிலைமையை திறம்பட சமாளிக்கும் என நம்புவதாக ராகுல் தெரிவித்தார். மேலும் நியூசிலாந்து விளையாட்டு அணிகள் திட்டமிட்டபடி இந்தியாவுக்கு வர வேண்டும் எனவும் அவர் அழைப்பு விடுத்தார் என்றார் கார்ட்டர்.
இந்தியாவில் நடைபெறவுள்ள ஹாக்கி உலகக் கோப்பை, ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள், காமன்வெல்த் போட்டிகளுக்கு எந்த நாடும் அணிகளை அனுப்பக் கூடாது. மீறி அனுப்பினால் அதற்கான விளைவுகளை சந்திக்க நேரிடும் என ஹூஜி தீவிரவாத அமைப்பின் தலைவரான இலியாஸ் காஷ்மீரி எச்சரிக்கை விடுத்துள்ளது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications