பிஎச்இஎல் தேர்வு-ஹைதராபாத்தில் தமிழக மாணவர்கள் விரட்டியடிப்பு

பொதுத்துறை நிறுவனமான பாரத் ஹெவி எலெக்ட்ரிகல்ஸ் லிமிடெட் (பிஎச்இஎல்) நடத்திய இந்தத் தேர்வு ஹைதராபாத்தில் கடந்த 14ம் தேதி நடந்தது.
இந்தத் தேர்வை எழுத தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருந்தும் 1,500 பேர் ஹைதராபாத் சென்றனர். மறு தினமே தேர்வு முடிவு வெளியாகும் என்பதால் ஏராளமான மாணவர்கள் அங்கேயே தங்கிவிட்டனர்.
ஆனால், இரு நாட்களாகியும் ரிசல்ட் வெளியாகவில்லை. இந் நிலையில் வெளி மாநில மாணவர்களை பணியில் சேர்ப்பதற்கு கண்டனம் தெரிவித்த தெலுங்கானா பகுதி மாணவர்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.
இந் நிலையில் காதால் தேர்வு எழுதிவிட்டு ஊர் திரும்பிய பல மாணவர்களும் முடிவைத் தெரிந்து கொள்வதற்காக நேற்று மீண்டும் ஹைதராபாத் சென்றனர்.
பிஎச்இஎல் நிறுவன அதிகாரிகளை சந்தித்து விபரம் கேட்டனர். அதற்கு, உங்களுக்கு இ-மெயிலில் ரிசல்ட் வரும் என்று மழுப்பலாக பதில் தந்தனர்.
ஆனால், எங்களிடம் இ-மெயில் ஐ.டியே வாங்கவில்லையே. அப்புறம் எப்படி மெயில் மூலம் ரிசல்ட் வரும் என்று மாணவர்கள் விடாப்பிடியாக விவரம் கேட்கவே,
சில அதிகாரிகள் அதிர்ச்சிகரமான விவரத்தைக் கூறினர். பெயர் வெளியிட விரும்பாத அவர்கள் கூறுகையில், இந்த தேர்வை எழுதிய தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்களில் சுமார் 50% பேர் தேர்ச்சி அடைந்துள்ளீர்கள். இதனால் தெலுங்கானா பகுதியினர் உங்கள் மீது கோபத்தில் உள்ளனர்.
உங்களுக்கு வேலை தந்தால் அவர்களது வேலை வாய்ப்பு பறிபோகும் என்பதால் உங்கள் ரிசல்ட்டை வெளியிடக் கூடாது என்று தடுக்கின்றனர் என்று அதிகாரிகள் கூறவே தமிழக மாணவர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் வெளியே வந்துள்ளனர்.
பிஎச்இஎல் அலுவலகத்துக்கு வெளியே ஓரிடத்தில் இவர்கள் கூடிப் பேசிக் கொண்டிருந்தபோது அங்கே உருட்டுக் கட்டைகளுடன் வந்த தெலுங்கானா பகுதி மாணவர்கள் தமிழக மாணவர்களை திடீரென தாக்கினர்.
அவர்களை ஓட ஓட விரட்டி அடித்ததோடு, வலுக்கட்டாயமாக அவர்களை கார்களில் ஏற்றி ரயில் நிலையத்தில் கொண்டு வந்து விட்டுவிட்டுச் சென்றனர்.
ரயில் ஏறி ஊருக்குப் போய்ச் சேர வேண்டும், மீண்டும் இங்கே வேலை கேட்டு வரக் கூடாது என்றும் எச்சரித்துள்ளனர்.
இதையடுத்து சென்னை ரயிலில் ஏறி தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஊர் திரும்பிய இந்த மாணவர்கள் இன்று காலை சென்னை மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் தங்களுக்கு நடந்த கொடுமை குறித்து புகார் தந்தனர்.
மேலும் எங்களுது உடைமைகள், சான்றிதழ்கள் எல்லாம் நாங்கள் தங்கியிருந்த ஹோட்டல் அறைகளில் இருக்கின்றன. அவற்றை மீட்டுத் தாருங்கள் என்று கோரியும்,
தாங்கள் விரைவில் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படலாம் என்றும் அப்போது தங்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என்றும் கோரி மனு கொடுத்தனர்.












Click it and Unblock the Notifications