உணவுத் தேவையை பூர்த்தி செய்ய மரபணு மாற்றப் பயிர்கள் அவசியம்- பவார்
டெல்லி: நாட்டின் உணவுத் தேவையை பூர்த்தி செய்ய மரபுண மாற்றப் பயிர்கள் அவசியம் தேவை என்று கூறியுள்ளார் விவசாயத்துறை அமைச்சர் சரத் பவார்.
டெல்லியில் விவசாயப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களின் 2 நாள் மாநாட்டை நேற்று தொடங்கி வைத்தார் பவார்.
அப்போது அவர் பேசுகையில்,
நாட்டின் உணவு பாதுகாப்பு பிரச்சினையை தீர்த்து வைக்க நான் விரும்புகிறேன். மக்கள் தொகை இரண்டு மடங்கு அதிகரித்து விட்டது. ஆனால், கூடுதல் விவசாய நிலங்களோ, கூடுதல் நீர்வளமோ கிடையாது. இத்தகைய நிலைமையில், நம்முடைய வேளாண் உற்பத்தியை அதிகரிக்க வேண்டியது உள்ளது. எனவே, நவீன அறிவியல் தொழில்நுட்பம், உயிரி தொழில்நுட்பம் போன்றவற்றை விவசாயத்தில் அறிமுகம் செய்ய வேண்டும்.
நாட்டின் உணவுத் தேவையை பூர்த்தி செய்வதற்காக மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்களை பயன்படுத்தலாம். மரபணு மாற்றப்பட்ட பயிர்கள், இந்தியாவுக்கு கட்டாயமாக தேவை. எனினும், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் எடுத்துள்ள முடிவை நாம் மதிக்க வேண்டும். நமக்கு உயரிய வழிகாட்டுதலை அந்த அமைச்சகம் தான் தர முடியும்.
தற்போதைய முடிவை, நம்முடைய முயற்சிகளுக்கு ஏற்பட்ட பின்னடைவாக கருதக் கூடாது. சவால்களை எதிர்கொள்ளுவது அவசியம். வேளாண் துறையில் மாற்று தொழில்நுட்பங்கள் குறைவாக உள்ளன. மரபணு மாற்றப்பட்ட பயிர்களால் உற்பத்தி அதிகரிப்பு, குறைவான உற்பத்தி செலவு, பொருளாதார மற்றும் சமூக மேம்பாடு போன்ற பயன்கள் கிடைக்கும்.
கால்நடை தீவன உற்பத்தியில் இது போன்ற தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்தபோது எதிர்ப்பு கிளம்பியதை குறிப்பிடலாம். எனவே, மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்கள் குறித்து பொது மக்களுக்கும், ஆட்சியாளர்களுக்கும் ஏற்பட்டுள்ள தவறான கருத்தை மாற்ற வேளாண் விஞ்ஞானிகள் முன்வர வேண்டும். முன்பை விட, இரண்டு மடங்கு வேகத்தில் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
இது தவிர, வேளாண் பல்கலைக்கழகங்களும், ஐ.சி.ஏ.ஆர் அமைப்பும் ஒருங்கிணைந்து செயல்படுவது அவசியம். தேசிய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தின் உள்கட்டமைப்பை அதிகரித்து வலுப்படுத்த வேண்டும் என்றார் பவார்.
பி.டி. கத்திரிக்குத் தடை இல்லை- ஜெயராம்:
இந் நிலையில் சென்னை எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் பல்லுயிர்ப் பெருக்கம், உணவு பாதுகாப்பு, பருவநிலை மாற்றம் குறித்த சர்வதேச மாநாடு சென்னை தரமணியில் நடைபெற்றது.
இதில் பேசிய மத்திய சுற்றுச்சூழல்துறை இணையமைச்சர் ஜெயராம் ரமேஷ்,
மரபணு மாற்றப்பட்ட கத்தரிக்காய்க்கு முழுமையான தடை விதிக்கப்படவில்லை. மாநில முதல்வர்கள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள், விஞ்ஞானிகள், பொதுமக்கள் ஆகியோரிடம் ஒருமித்தக் கருத்து ஏற்பட்டால் மரபணு மாற்றப்பட்ட கத்தரிக்காய் பயிரிட அனுமதிக்கப்படும்.
இது குறித்து அனைத்துத் தரப்பிலும் விவாதிக்கப்படும். அதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். வரும் நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் மரபணு மாற்றப்பட்ட உணவுப் பொருள்களை அனுமதிப்பது குறித்து விவாதிக்கப்படும்.
கத்தரிக்காய் மட்டுமல்ல மரபணு மாற்றப்பட்ட மற்ற உணவுப் பொருள்களை அனுமதிப்பது குறித்து விவாதம் நடத்தப்படும். ஒருமித்தக் கருத்து அடிப்படையில் முடிவு எடுக்கப்படும். பெரும்பாலான விஞ்ஞானிகள் மரபணு மாற்றப்பட்ட கத்தரிக்காய் உள்ளிட்ட உணவுப் பயிர்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் முதுமலை, கேரளத்தில் அதிரப்பள்ளியில் மின் உறுபத்தி திட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. 1972ல் கொண்டுவரப்பட்ட வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தை திருத்துவதற்கான புதிய மசோதா வரும் நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் கொண்டுவரப்படும். அதில் வனவிலங்குகளைப் பாதுகாக்க கடுமையான விதிமுறைகள் இருக்கும்.
சுற்றுச் சூழல் விஞ்ஞானி பச்சௌரி இமயமலை உருகுவது பற்றி தெரிவித்த கருத்து முடிந்தபோன கதை. ஆனால் இமயமலை உருகி வருவது உண்மைதான். அதனைத் தடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications