சென்னை: ஜாமீனில் வந்த ரவுடி வெட்டிக் கொலை
சென்னை: கொலை வழக்கில் ஜாமீனில் வந்த ரவுடி குடிபோதையில் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
சென்னை, அருகே பட்டாபிராம் ராஜீவ்காந்தி நகர் கார்டன் தெருவில் வசித்து வருபவர் தசரதன். இவருடைய மகன் பூபாலன் என்கிற சுகுமார் (22), பிரபல ரவுடி.
கடந்த 2008ம் ஆண்டில் அண்ணாநகரைச் சேர்ந்த பிரேம் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஆவடி போலீசார் பூபாலனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ஜாமீனில் வெளியே வந்த அவர் அடிதடியில் ஈடுபடாமல் இருக்க, பெற்றோரால் வெளியூரில் தங்க வைக்கப்பட்டார். நீதிமன்ற வழக்குக்காக ஆவடி வந்திருந்த அவர் நேற்று மாலை இந்துக் கல்லூரி அருகே உள்ள ஏரிகால்வாயில் வெட்டிக் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார்.
போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பூபாலன் கொலை செய்யப்பட்டது குறித்து போலீசார் கூறுகையில்,
'பூபாலன் வெளியே வந்து ஜாலியாக சுற்றிக் கொண்டிருந்ததைக் கேள்விப்பட்ட பிரேமின் தங்கை கணவர் ஆனந்த ராஜ் சுகுமாரை தீர்த்து கட்ட சதித் திட்டம் தீட்டியதாக தெரிகிறது.
தற்போது வேறு ஒரு கொலை வழக்கில் சிறையில் இருக்கும் ஆனந்தராஜ், பிரபல ரவுடி ஆதிநாராயணன் என்பவரிடம் கூறி பூபாலனை தீர்த்துக்கட்ட ஏற்பாடு செய்தார்.
ஆதிநாராயணன், பூபாலனிடம் நைசாக பேசி பட்டாபிராமில் உள்ள மதுக்கடைக்கு நேற்று அழைத்து வந்திருந்தார். திருநின்றவூரைச் சேர்ந்த ரவுடிகள் மகேந்திரன் என்பவரும் ஆதிநாராயணனுடன் இருந்தார்.
மூன்று பேரும் மது அருந்தினர். பூபாலனுக்கு கூடுதலாக போதையை ஏற்றிவிட்டு, இந்துக்கல்லூரி அருகே ஏரிக்கால்வாய் பகுதிக்கு வந்தனர்.
அப்போது பூபாலனை மற்ற இருவரும் சேர்ந்து வெட்டிக் கொலை செய்ததாக தெரிகிறது. தற்போது ஆதிநாராயணனும், மகேந்திரனும் தலைமறைவாக உள்ளனர். அவர்களை தேடி வருகிறோம்' என்றனர்.












Click it and Unblock the Notifications