ஏர் இந்தியாவுக்கு ரூ.800 கோடி நிதியுதவி!

பொருளாதார மேம்பாட்டுக்கான அமைச்சரவைக் கூட்டம் நேற்று பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நேற்று டெல்லியில் நடந்தது.
இதில் பல்வேறு பொருளாதார பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. ஏர் இந்தியா நிறுவனம் இப்போது ரூ.145 கோடி 'செலுத்தப்பட்ட பங்குகள் முதலீட்டை'க் கொண்டுள்ளது. ஆனால் இதன் கடன் சுமையோ பல ஆயிரம் கோடியைத் தாண்டுகிறது.
தனது நெருக்கடியிலிருந்து மீள ரூ.20,000 கோடி வரை நிதிச் சலுகை, பங்கு முதலீட்டு உயர்வு வேண்டும் என்றது ஏர் இந்தியா. ஆனால் இந்த சலுகைகளை உடனடியாக தர முன்வரவில்லை மத்திய அரசு. மாறாக நிறுவனத்தின் ஊழியர்களுக்கான சம்பளம் உள்ளிட்ட செலவுகளைக் குறைக்குமாறு மத்திய அரசு அறிவுறுத்தியது.
மேலும் ஏர் இந்தியா - இந்தியன் ஏர்லைன்ஸ் இணைப்பு மூலம் உருவான நேஷனல் ஏவியேஷன் கம்பெனிக்காக 111 புதிய விமானங்களை வாங்குவதற்கு ரூ.55,000 கோடி வரை நிதி தேவைப்படுவதாகவும் கோரிக்கை வைத்தது.
ஆனால் மத்திய அரசு ஊழியர்களின் எண்ணிக்கையைக் குறைப்பதில் தீவிரமாக உள்ளது. இதில் பல பிரச்சினைகளை ஏர் இந்தியா சந்திக்கும் என்று தெரிகிறது.
இந்நிலையில் ஏர் இந்தியா கேட்ட நிதிச் சலுகை எதையும் தரத் தயாராக இல்லை என்பதை சூஸகமாக அறிவித்துள்ள மத்திய அரசு, அத்தியாவசிய பிரச்சினைகளை சமாளிக்க மட்டும் ரூ.800 கோடி நிதிச் சலுகை வழங்குவதாக அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications