நிரூபமா ராவை சந்தித்தார் கோத்தபயா ராஜபக்சே!
டெல்லி: ராஜபக்சேவின் தம்பியும், பாதுகாப்புத்துறைச் செயலாளருமான கோத்தபயா ராஜபக்சே இன்று வெளியுறவுத்துறை செயலாளர் நிரூபமா ராவை சந்தித்துப் பேசினார்.
மத்திய பாதுகாப்புத் துறை ஏற்பாடு செய்துள்ள DEFEXPO INDIA 2010 என்ற பாதுகாப்புத் துறை கண்காட்சியைப் பார்வையிடுவதற்காக கோத்தபயா டெல்லி வந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஆனால் ராஜபக்சேவின் உத்தரவின் பேரிலேயே அவர் இந்தியா வந்து, முக்கிய அதிகாரிகளை சந்திக்கவுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
எந்தக் காரணத்திற்காக கோத்தபயா, டெல்லி வந்துள்ளார் என்ற விவரம் தெரியவில்லை. கோத்தபயாவுடன் இந்தியாவுக்கான இலங்கை தூதர் பிரசாத் காரியவம்சமும் உடன் கலந்து கொண்டுள்ளார்.
பொன்சேகாவை ராணுவ கோர்ட்டில் நிறுத்தி விசாரணை நடத்தி கடும் தண்டனை வாங்கிக் கொடுக்க ராஜபக்சேவை விட கோத்தபயாதான் துடியாய் துடித்துக் கொண்டிருக்கிறார்.
இதற்கு முக்கிய காரணம் - தான் புரிந்த போர்க் குற்றங்கள் குறித்து பகிரங்கமாக போட்டு உடைத்து பெரும் நெருக்கடியை ஏற்படுத்தினார் பொன்சேகா என்பதால். மேலும், அமெரிக்காவிடம் தன்னைப் பற்றிய பல தகவல்களை பொன்சேகா தெரிவித்து விட்டதாகவும் சந்தேகப்படுகிறார் கோத்தபயா.
தன்னை பகிரங்கமாக எதிர்க்கத் துணிந்து விட்டதால்தான் பொன்சேகாவை கடுமையாக தண்டிக்க துடித்துக் கொண்டிருக்கிறார் கோத்தபயா.
இந்த நிலையில்தான் பொன்சேகா விவகாரத்தில் சட்டப்படி நடந்து கொள்ளுமாறு இலங்கை அரசை இந்தியா கேட்டுக் கொண்டது.
இந்தப் பின்னணியில்தான் கோத்தபயா டெல்லி வந்துள்ளார். பொன்சேகாவுக்கு எதிரான ஆதாரங்களை இந்தியாவிடம் தெரிவித்து தங்களது நடவடிக்கைகள் நியாயமானதுதான் என்று கூறவே கோத்தபயா டெல்லிக்கு காவடி எடுத்துள்ளதாகவும் ஒரு தகவல் கூறுகிறது.
இன்று அவர் வெளியுறவுத்துறைச் செயலாளர் நிரூபமா ராவை சந்தித்துப் பேசினார். நாளையே கோத்தபயா கொழும்பு திரும்புவார் எனத் தெரிகிறது.
முன்னதாக கோத்தபயா ஐந்து நாள் டெல்லியில் இருப்பார் என்றும், தனது பயணத்தின் ஒரு பகுதியாக புத்த கயா செல்வார் என்றும் செய்திகள் வெளியாகின. ஆனால் கோத்தபயாவின் பயணத் திட்டம் குறித்த தகவல்கள் மீடியாக்களில் வெளியாகி விட்டதால் தனது பயணத்தை சுருக்கிக கொண்டு நாளையே கோத்தபயா கொழும்புக்குப் போய் விடுவார் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications