தெலுங்கானாவுக்காக எம்.பி. பதவியை உதறினார் விஜயசாந்தி

ஹைதராபாத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
தெலுங்கானா மாநிலம் அமைப்பதில், மத்திய அரசு காலம் தாழ்த்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. உடனே தெலுங்கானா மாநில அறிவிப்பை வெளியிட வேண்டும்.
தெலுங்கானா மாநிலம் அமைப்பது பற்றி ஆய்வு நடத்த அறிவிக்கப்பட்டுள்ள குழுவின் செயல்பாடுகளில் எங்களுக்கு திருப்தி இல்லை. மத்திய அரசின் காலம் கடத்தும் நடவடிக்கைதான் இது.
நான் எனது விலகல் கடிதத்தை பாராளுமன்ற சபாநாயகருக்கு அனுப்பி விட்டேன். தெலுங்கானா பிரச்சினையில், அடுத்த கட்ட போராட்டத்தை, தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சியின் தலைவர் சந்திர சேகர ராவ் விரைவில் அறிவிப்பார் என்றார்.
ஏற்கனவே இந்தப் பிரச்சினை தொடர்பாக, தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சியை சேர்ந்த 10 எம்.எல்.ஏ.க்கள், 2 எம்.பி.க்கள், ஒரு எம்.எல்.சி. ஆகியோர் பதவி விலகி உள்ளனர்.
மேலும் தெலுங்கானாவைச் சேர்ந்த தெலுங்கு தேசம் கட்சி எம்.பிக்கள் 30க்கும் மேற்பட்டோரும் விலகுவதாக ராஜினாமா கடிதம் அளித்துள்ளனர் என்பது நினைவிருக்கலாம்.
ராணுவப் படையினர் இருக்க கோர்ட் அனுமதி:
இந் நிலையில் ஹைதராபாத் உஸ்மானியாப் பல்கலைக்கழக வளாகத்திற்குள் துணை ராணுவப்படையினர் தொடர்ந்து இருக்கலாம் என உச்சநீதிமன்றம் ஆந்திர மாநில அரசுக்கு அனுமதி அளித்துள்ளது.
பிப்ரவரி 23ம் தேதி வரை இந்த அனுமதி செல்லுபடியாகும்.
தெலுங்கானா போராட்டங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. ஹைதராபாத்தில் உள்ள உஸ்மானியா பல்கலைக்கழக மாணவர்கள்தான் இந்த போராட்டத்தில் தீவிரமாக பங்கெடுத்து வருகின்றனர்.
இதையடுத்து அங்கு துணை ராணுவப்படையினரை குவித்தது ஆந்திர மாநில அரசு. படையினருக்கும், மாணவர்களுக்கும் இடையே தொடர்ந்து மோதல் வெடித்து வருகிறது. இதனால் மாணவர்கள் மீது அடிக்கடி தாக்குதல்கள் நடைபெறுகின்றன.
இந்த நிலையில், மாணவிகளை ஆந்திர மாநிலப் போலீஸாரும், துணை ராணுவப்படையினரும் மானபங்கப்படுத்தியதாக சர்ச்சைகள் எழுந்தன.
இந்தப் பின்னணியில், பல்கலைக்கழக வளாகத்திற்குள் நிறுத்தப்பட்டுள்ள துணை ராணுவப்படையினரை அங்கிருந்து வெளியேற்ற வேண்டும் என்று கோரி ஆந்திர பிரதேச உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதை ஏற்ற உயர்நீதிமன்றம் அனைத்துப் படையினரையும் வெளியேற உத்தரவிட்டது.
இதையடுத்து உச்சநீதிமன்றம் விரைந்தது ஆந்திர அரசு. அங்கு ஆந்திர மாநில அரசு தாக்கல் செய்த மனுவில், நிலைமை அங்கு மோசமாக உள்ளது. பல்கலைக்கழக வளாகத்தில் தெலுங்கானா விவகாரம் தொடர்பாக பெரும் வன்முறை சூளும் நிலை உள்ளது.
மேலும் பல்கலைக்ழக வளாகத்திற்குள் நக்சலைட்டுகள் ஊடுறுவியுள்ளதாகவும் எங்களுக்குத் தகவல்கள் வந்துள்ளன. எனவே அங்கு சட்டம் அமைதியை நிலை நாட்ட பாதுகாப்புப் படையினர் இருக்க வேண்டியது அவசியமாகும் என்று கூறப்பட்டிருந்தது.
இதை ஏற்ற நீதிபதிகள் சிங்க்வி, தாக்கூர் அடங்கிய பெஞ்ச், ஆந்திர மாநில உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு பிப்ரவரி 23ம் தேதி வரை தடை விதித்து உத்தரவிட்டது.












Click it and Unblock the Notifications