கருணாநிதி மீது உள்ள பாசத்தால் விமர்சிக்கிறோம்- ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்

சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் இளங்கோவன் பேசுகையில்,
காங்கிரஸ் கட்சியில் இப்போது காமராஜரை பற்றிக்கூட பேசுவது இல்லை. பொதுப் பிரச்னைகள் குறித்து கட்சிக்குள் விவாதங்கள் நடப்பது இல்லை.
கொடியேற்று விழாவில் புகைப்படம் எடுப்பதோடு சரி. கட்சிக்குள் தலைவர்கள் ஒருவரை ஒருவர் சந்திப்பதும் இல்லை. எங்கும் கோஷ்டிகள். அப்படிக் கட்சியினர் நான்கைந்து பேர் சேர்ந்தால், பொறுப்பில் உள்ளவர்களைக் கவிழ்ப்பதா? அல்லது ஜூலை மாதத்தில் மாநிலங்களவைத் தேர்தல் வருகிறது, பதவி பெறலாமா? என்ற சிந்தனையே வெளிப்படுகிறது.
காங்கிரஸ் கட்சியில் உள்ள இளைஞர்கள் மீண்டும் காமராஜர் ஆட்சியை கொண்டு வருவார்கள் என்று நம்புகிறேன். அவர்களின் பக்கம் மக்கள் இருப்பார்கள்.
நான் யாரையும் காயப்படுத்த விரும்பவில்லை. எப்படியாவது வாக்குகளைப் பெற வேண்டும் என்பதால் வாக்குறுதிகளை அள்ளி வீசும் நிலை இப்போது உள்ளது. இப்போது அரசியல்வாதிகளின் பேச்சில் 10 சதவீதம் கூட உண்மை இல்லை.
'ஆயுதத்திலும்' காந்தி உருவம்..
தேர்தலில் அரசியல்வாதிகள் பயன்படுத்தும் 'ஆயுதத்தில்' கூட, காந்தியின் உருவம் உள்ளதுதான் சங்கடத்தைத் தருகிறது. நாம் ஏமாந்துவிடக் கூடாது என்பதால்தான் கருத்துகளைத் தெரிவிக்கிறேன். நாட்டுக்கு நல்லது எது என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
மக்களை வளப்படுத்துங்கள் என்றால், சிலர் சென்னையில் சாம்ராஜ்யங்களை உருவாக்கிக் கொண்டிருக்கின்றனர். இந்தச் சூழலில் காங்கிரஸ் கட்சியால் மட்டுமே நாட்டைக் காப்பாற்ற முடியும். தமிழகத்திலும் நல்லாட்சியைத் தர முடியும்.
நான் சொல்வது தவறு என்கிறார் முதல்வர்...
ரேஷனில் ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி போடுவதால் மக்கள் சந்தோஷமாக இருக்கிறார்கள் என்று எப்படிச் சொல்ல முடியும்? கிலோ அரிசி ரூ.1 என்றால் மற்ற பொருள்களின் விலை என்ன என்று பார்த்தால் இந்தத் திட்டத்தால் என்ன பயன்?.
மத்திய அரசு மானியத்தில் இலவச கலர் டி.வி. வழங்குகிறீர்கள் என்றால் நான் தவறான தகவல்களைக் கூறுவதாக முதல்வர் கூறுகிறார்; ஒத்துக் கொள்கிறேன். அப்படி என்றால், நான் கூறிய 100 விஷயங்களில் 99 விஷயங்கள் சரி தானே.
மருத்துவக் காப்பீடு திட்டம் நல்ல திட்டம்தான். ஆனால், ஆந்திரத்தில் இந்தத் திட்டத்தை காங்கிரஸ் கட்சியினர்தான் முதலில் கொண்டு வந்தனர். இதற்கு மத்திய அரசு 65 சதவீத நிதி வழங்குகிறது.
பாசத்தால் விமர்சிக்கிறோம்...
இந்த வயதிலும் அயராது பணியாற்றுகிறீர்கள், பாராட்டுகிறோம். ஆனால், தவறு இருந்தால் எடுத்துக் கூறுகிறோம். உங்கள் மீதுள்ள பாசத்தால் விமர்சிக்கிறோம். நமது கூட்டணி என்பதால் எடுத்துரைக்கிறோம். இதைத் தவறாகக் கருதக் கூடாது.
காங்கிரஸ்காரர்கள் தவறு இருந்தால் சுட்டிக் காட்ட வேண்டும். அடுத்து மாறுதல்கள் வந்தால் என்ன செய்வது? (கூட்டணி மாறலாம் என்கிறார்), முதலிலேயே தயாராக இருக்க வேண்டாமா? கொஞ்சம் கொஞ்சமாக காலம் கனியட்டும். நம் பணியை ஆரம்பிக்கலாம்.
சிலர் மாநில சுயாட்சி என்று சில நேரங்களில் மட்டும், மேடையில் இருப்பவர்களை மிரட்டுவதற்காகக் கூறுகின்றனர் (தன்னை மிரட்டி விழாக்களுக்கு அழைப்பதாக அஜீத் சொன்னதை மறைமுகமாகக் குறிப்பிடுகிறார்)என்றார் இளங்கோவன்.
இளங்கோவனின் இந்தப் பேச்சு முழுவதுமே முதல்வர் கருணாநிதியை மறைமுகமாகவும், நேரடியாகவும் சாடியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications