சட்டசபை முற்றுகை போராட்டம்: மாணவர் தீக்குளிப்பு, ஹைதராபாத்தில் பதற்றம்-ரயில்கள் நிறுத்தம்

இதற்காக நேற்று முதல் 10 தெலுங்கானா மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள் ஹைதராபாத்தில் குவிந்துள்ளனர்.
இந்த முற்றுகைப் போராட்டத்தை முறியடிக்க மாநில அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
ஹைதராபாத் நகரில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதோடு இன்று தெலுங்கானா பகுதியில் இருந்து ஹைதராபாத் வரும் அனைத்து ரயில்களும் நிறுத்தப்பட்டுள்ளன.
மேலும் நகர் முழுவதும் 8 ஐ.ஜிக்கள், 10 டி.ஐ.ஜிக்க், 30 எஸ்பிக்கள் தலைமையில் 20,000 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
வெளி மாவட்டங்களில் இருந்து வரும் மாணவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்ய ஹைதராபாத்தை சுற்றி 100 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
உஸ்மானியா பல்கலைக்கழக வளாகத்தில் துணை ராணுவ படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். நகரம் முழுவதிலும் பதட்டம் நிலவுவதால் 45 கம்பெனி துணை ராணுவ படையினரும் ரோந்து சுற்றி வருகின்றனர்.
தடையை மீறி முற்றுகைப் போராட்டம் நடத்த முயன்ற மாணவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். ஆனாலும் அவர்கள் தொடர்ந்து முயன்று வருவதால் பரபரப்பு நிலவுகிறது.
போலீஸ் கெடுபிடியால் இதுவரை முற்றுகைப் போராட்டம் நடத்தப்படவில்லை. ஆனால் உஸ்மானியா பல்கலைக்கழக வளாகத்தில் வன்முறை வெடித்தது.
ஆங்காங்கே கூட்டமாக நின்றிருந்த மாணவர்களை போலீசார் கலைந்து செல்லுமாறு வற்புறுத்தினர். அப்போது மாணவர்களுக்கும், போலீசாருக்கு ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியது. பின்னர் போலீசார் மீது மாணவர்கள் திடீரென கற்களை வீசி தாக்குதல் நடத்தத் தொடங்கினர். இதையடுத்து போலீசார் தடியடி நடத்தினர்.
மாணவர் தீக்குளிப்பு:
இந் நிலையில் தெலுங்கானா கோரிக்கையை வலியுறுத்தி உஸ்மானியா பல்கலைக்கழக மாணவர் ஒருவர் தீக்குளித்தார். மிகவும் கவலைக்கிடமான நிலையில் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இதனால் மாணவர்கள் கூட்டம் தவிர மற்றவர்கள் வெளியில் தலைகாட்டவில்லை. இதனால் ஹைதராபாத் நகர் வெறிச்சோடி காணப்படுகிறது.
தமிழர்கள் தாக்கப்பட்ட விவகாரம்-7 பேர் கைது:
இதற்கிடையே ஹைதராபாதில் பிஎச்இஎல் நிறுவனத்தில் தேர்வு எழுதச் சென்ற தமிழக இளைஞர்கள் தாக்கப்பட்ட விவகாரத்தில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக ராமச்சந்திரபுரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி 7 பேரை கைது செய்துள்ளதாக மேடக் மாவட்ட எஸ்பி சஜ்ஜனர் தெரிவித்துள்ளார்.
கொந்தளிப்புக்கு இடையே பட்ஜெட் தாக்கல்:
இந் நிலையில் தனித் தெலுங்கானா விவகாரம் தொடர்பாக ஹைதராபாத்தில் மாணவர்கள் கொந்தளிப்பு, தீக்குளிப்பு ஆகிய பதட்டமான சூழ்நிலைகளுக்கு நடுவே, ஆந்திர சட்டசபையில் இன்று வரியில்லாத பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார் முதல்வர் ரோசய்யா.
தெலுங்கானா போராட்டங்களால் அரசுக்கு வருவாய் இழப்பு ரூ.8,000 கோடி இருக்கும் என்று மதிப்பிடப்பட்டது. ஆனால் பட்ஜெட்டில் வருவாய் இழப்பு 558 கோடி மட்டுமே சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஹைதராபாத்தில் டிராபிக் குழப்பம்:
பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு வசதியாக ஹைதராபாத்தில் பல சாலைகளை ஒரு வழிப்பாதையாகவும், தடை செய்யப்பட்ட பாதையாகவும் போக்குவரத்து போலீசார் அறிவித்தனர்.
இதனால் மக்கள் பல கி.மீ. தூரங்களுக்கு அலைக்கழிக்கப்பட்டனர். பல சாலைகளில் வாகன ஓட்டிகள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஹைதராபாத்தில் இந்த தற்காலிக பாதை மாற்றங்களால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.












Click it and Unblock the Notifications