புத்தமதம் மீதான நம்பிக்கையால் உட்ஸ் ஒழுக்கமாவார்: தலாய் லாமா
பெவர்லி ஹில்ஸ் (கலிபோர்னியா): சூழ்நிலைகளால் தன் தவறுகளை உணர்ந்துள்ள டைகர் உட்ஸுக்கு, புத்த மதம் மீதான நம்பிக்கை நல்லொழுக்கத்தை உண்டாக்கட்டும் என்று திபெத்திய மதத் தலைவர் தலாய்லாமா குறிப்பிட்டுள்ளார்.
செக்ஸ் லீலையின் தாக்கத்திலிருந்து மெதுவாக விடுபட்டு வரும் டைகர் உட்ஸ், கடந்த சில வாரங்களாக மிசிசிப்பியில் உள்ள செக்ஸ் மறுவாழ்வு மையத்தி்ல் தீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டிருந்தார்.
இந்த முகாமின்போது அவருடைய மனைவி எலின் நார்டெக்ரனும் பங்கேற்றதாக கூறப்படுகிறது. இதற்கிடையே நேற்று முன்தினம் தனது தவறை எல்லாம் உணர்ந்தவராக மீடியாவில் பொறுப்புடன் பேட்டி கொடுத்த உட்ஸ்,
'சிறு வயதில் என் அம்மா எனக்கு கற்றுக்கொடுத்த புத்த மத சிந்தனைகளை எல்லாம் இப்போது நான் நினைத்துப் பார்க்கிறேன்.
எனக்கு வழிகாட்டப்பட்ட பாதையில் இருந்து நான் விலகிச் சென்றதால் தான் இந்த விரும்பத்தகாத நிலை எனக்கு ஏற்பட்டது.
சொல்லித் தரப்பட்ட மத சிந்தனைகளை எனது சொந்த வாழ்க்கையில் நான் இணைத்து செயல்படாமல் போனதற்கான விளைவுகளை நான் எனது வாழ்நாளில் கண்டுவிட்டேன்' என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், கலிபோர்னியாவில் சுற்றுப்பயணமாக வந்திருந்த திபெத்திய புத்த மதத் துறவி தலாய்லாமாவிடம் உட்ஸ் பேச்சு குறித்து செய்தியாளர்கள் கருத்து கேட்டனர்.
அதற்கு தலாய் லாமா பதிலளிக்கையில்,
'சுய ஒழுக்கம் என்பது புத்த மதத்தின் அதிமுக்கியமான நெறி. உட்ஸ் என்ன சொன்னார் என்பது பற்றியெல்லாம் எனக்கு தெரியாது.
ஆனால் சூழ்நிலைகள் அவருக்கு உணர்த்தியிருக்கும். தற்போது அவருக்கு ஏற்பட்டிருக்கும் நம்பிக்கை அவருக்கு நல்லொழுக்கத்தை கொண்டுவரும்.
எந்த மதமானாலும் ஒழுக்கத்தைப் பொறுத்தவரை ஒரே சிந்தனை தானே. அதை புத்தமதம் என்றும் அழைத்துக் கொள்ளலாம். வேறு பெயர் வேண்டுமானாலும் சூட்டிக் கொள்ளலாம்.
நல்லொழுக்கத்தை கடைப்பிடிக்கவேண்டும். பின் விளைவுகளை தெரிந்துகொண்டு செயல்பட வேண்டியது மிக முக்கியமானது' என்றார்.












Click it and Unblock the Notifications