திமுக-காங்கிரஸ் வெற்றிக் கூட்டணி தொடரும்- ஜெயந்தி நடராஜன்
சென்னை: தமிழ்நாட்டில் திமுக-காங்கிரஸ் வெற்றிக் கூட்டணி தொடரும். இதில் யாருக்கும் எந்த சந்தேகமும் வேண்டாம் என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஜெயந்தி நடராஜன் கூறினார்.
சென்னையில் நேற்று தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற சர்வதேச மகளிர் தின விழா மற்றும் காங்கிரஸ் கட்சியின் 125ம் ஆண்டு துவக்க விழாவில் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜெயந்தி நடராஜன் பேசுகையில்,
'உலக வரலாற்றில் 125 ஆண்டுகள் ஒரு கட்சி இருந்திருக்க வாய்ப்பே கிடையாது. இந்திய தேசிய பேரியக்கம் என்று கூறுவதற்கு ஒரே காரணம் 125 ஆண்டுகளாக இருந்தது மட்டும் அல்லாமல், இன்றைய தினம் வரை இந்தியாவை ஆளும் கட்சியாக காங்கிரஸ் இருக்கிறது.
வெள்ளையனே வெளியேறு போராட்டம் தியாக மோகனவல்லி என்ற தமிழ்நாட்டை சேர்ந்த பெண்ணால் உருவானது என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும்.
தமிழ்நாட்டை சேர்ந்த வேலுநாச்சியார் 300, 400 ஆண்டுகளுக்கு முன்பு வெள்ளையனை எதிர்த்து சிவகங்கையில் வெற்றியை தேடிக்கொடுத்தவர்.
சுதந்திர போராட்டத்தில் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி, சரஸ்வதி பாண்டுரங்கன், ராஜம்பாரதி, அம்புஜம்மாள் உள்பட எத்தனையோ பெண்கள் சிறைச்சாலைக்கு சென்றார்கள். அவர்களின் வரிசையில் நாட்டுக்காக தொடர்ந்து போராடிக்கொண்டே இருக்கிறோம்.
உலக வரலாற்றிலேயே பிரதமர் பதவி வேண்டாம் என்று சொன்ன ஒரே தலைவி சோனியா காந்தி தான். சோனியா காந்தியைபோல அவரது மகன் ராகுல்காந்தியும் பதவி எனக்கு முக்கியம் இல்லை, மக்கள் தான் முக்கியம் என்கிறார்.
காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி நாட்டுக்கு பல முக்கியமாக காரியங்களை எல்லாம் செய்திருக்கிறது. காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி தொடரும் என்பதை அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் என்ற வகையில் நான் அதிகாரபூர்வமாக கூறுகிறேன்.
காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி பற்றி பல கருத்துக்கள் வருவதை எல்லாம் நம்பாதீர்கள். தமிழ்நாட்டில் முதல்-அமைச்சர் கருணாநிதி தலைமையில் காங்கிரஸ்-தி.மு.க வெற்றிக் கூட்டணி தொடரும்' என்றார்.
விழா முடிந்ததும் நிருபர்கள் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு ஜெயந்தி நடராஜன் பதில் அளிக்கையில்,
'முதல்-அமைச்சர் கருணாநிதி நாள்தோறும் சாதனைகளை செய்து வருகிறார். மத்திய அரசுடன் இணக்கமாக செயல்பட்டு பல்வேறு திட்டங்களை நிறைவேற்றிவருகிறார்.
தி.மு.க-காங்கிரஸ் கூட்டணியில் எந்த விரிசலுக்கும் இடம் இல்லை. எங்களின் வெற்றிக்கூட்டணி தொடரும். இதில் யாருக்கும் எந்த சந்தேகமும் வேண்டாம்.
உயர் கல்வி பிரச்சினையை பொறுத்தவரையில் இப்போது தான் முதல்-அமைச்சர் கருணாநிதி இதுபற்றிய கருத்தை வலியுறுத்தியுள்ளார். இதுபற்றி விவாதிக்கப்படும்.
முல்லைப் பெரியாறு அணை பிரச்சினையில் தமிழக காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு மிகவும் தெளிவாக இருக்கிறது. தமிழக மக்களின் நலன் பயக்கும் வகையில் தமிழக காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு இருக்கும்' என்றார்.












Click it and Unblock the Notifications