தடையை மீறி பட்டம் விற்பனை: லாகூரில் 1000 பேர் கைது
லாகூர்: பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம், லாகூர் உள்ளிட்ட இடங்களில், தடையை மீறி பட்டம் பறக்கவிட்டது மற்றும் விற்பனை செய்தது தொடர்பாக ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.
பாகிஸ்தானில் பாரம்பரிய பசந்த் திருவிழாவை வண்ணமயமான பட்டங்களை பறக்கவிட்டு மக்கள் கொண்டாடுவது வழக்கம். சமீபகாலமாக இதுபோன்ற திருவிழாவின் போது பட்டங்களில், மாஞ்சா உள்ளிட்ட அபாயகரமான கலவையைப் பயன்படுத்துவதால் கழுத்து அறுபட்டு பலர் உயிரிழந்த, படுகாயமடைந்த சம்பவங்கள் ஏற்பட்டன.
இதனால் கடந்த 3 ஆண்டுகளாக பட்டம் பறக்கவிடுவதற்கு அரசு தடை விதித்தது. இந்தாண்டு வரும் மார்ச் 6 மற்றும் 7ம் தேதிகளில் இத்திருவிழா கொண்டாடப்படும் என்று சில அமைப்புகள் அறிவித்துள்ளன.
மேலும் லாகூர் உள்ளிட்ட பஞ்சாப் மாகாணப் பகுதிகளில் சட்டத்தை மீறி பட்டங்கள் பறக்கவிடப்படும் என லாகூர் பட்டம் பறக்கவிடுவோர் சங்கத்தினர் அறிவித்தனர்.
இதனால் ஏராளமான பட்டங்கள் விற்பனைக்கு தயாராயின. இதையடுத்து போலீசார் பட்டம் பறக்கவிட்டவர்கள் மற்றும் விற்பனை செய்தவர்கள் என சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களை இன்று கைது செய்தனர்.
லாகூர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டங்கள் மற்றும் 10 ஆயிரம் ட்வைன் நூல் கண்டுகளை பறிமுதல் செய்தனர்.












Click it and Unblock the Notifications