பொனசேகா, ரணில் கொழும்பில் போட்டி?

இருப்பினும், இந்த இருவரும் தனித் தனியான கட்சிகள் சார்பில் தனித் தனிச் சின்னத்தில் போட்டியிடுவார்கள் என்றும் கூறப்படுகிறது. அதிபர் தேர்தலில் ரணில் தலைமையிலான கூட்டணியில் இடம் பெற்று போட்டியிட்டார் பொன்சேகா என்பது நினைவிருக்கலாம்.
ஐக்கிய தேசியக் கட்சியின் யானைச் சின்னத்தில் ரணிலும், தேசிய ஜனநாயக முன்னணியின் வெற்றிக் கோப்பை சின்னத்தில் பொன்சேகாவும் களமிறங்க உள்ளதாக திவயின என்ற சிங்கள ஏடு செய்தி வெளியிட்டுள்ளது.
முன்னதாக, நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து விரைவில் முடிவு எடுக்குமாறு பொன்சேகாவை ஐக்கிய தேசிய கட்சி கேட்டுக் கொண்டது.
சிறையில் இருக்கும் அவர் தேர்தலில் போட்டியிட்டால் மக்களின் அனுதாபத்தைப் பெற முடியும் என்று எதிர்க்கட்சிகள் கருதுகின்றன.
இலங்கை நாடாளுமன்றத் தேர்தலிலும் ராஜபக்சேவின் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியை எதிர்த்து கூட்டாக களம் காணவும் இலங்கை எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன.
இது குறித்து ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலர் திசா அத்தநாயக கூறுகையில், அதிபர் தேர்தலில் போட்டியிட்ட பொன்சேகா இந்த தேர்தலிலும் போட்டியிடுவது குறித்து விரைவில் முடிவெடுக்க வேண்டும்.
அவர் கைது செய்யப்படுவதற்கு முன் எங்கள் கூட்டணித் தலைவர்கள் அவரைச் சந்தித்தனர். அப்போது நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுமாறு அழைப்பு விடுத்தனர். இது குறித்து முடிவெடுக்க சிறிது கால அவகாசம் தருமாறு பொன்சேகா கேட்டுக் கொண்டார்.
இப்போது சிறையில் உள்ள பொன்சேகாவுக்கு, தேர்தலில் போட்டியிடுவது குறித்து முடிவு எடுக்குமாறு அவரது வழக்கறிஞர் மூலம் தகவல் அனுப்பினோம். ஆனால் அவரிடமிருந்து இதுவரை பதில் கிடைக்கவில்லை. அவர் எடுக்கும் முடிவை வைத்துதான் எதிர்க்கட்சிகள் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது என்றார்.
ஆனால் தற்போது ரணிலும், பொன்சேகாவும் தனித் தனி கட்சிகள் சார்பில் போட்டியிடுவதாக புதுச் செய்தி வந்துள்ளதால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
அதிபர் தேர்தலைப் போலவே ஒற்றுமையுடன் தேர்தலை சந்தித்தால் மட்டுமே ராஜபக்சேவுக்கு தோல்வியைக் கொடுக்க முடியும் என்ற கருத்து பெரும்பாலான எதிர்க்கட்சிகள் மத்தியில் நிலவினாலும், அதில் ஒருமித்த கருத்து இதுவரை ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications