2 எம்எல்ஏக்கள் மீது கட்சித் தாவல் நடவடிக்கை கோரி சபாநாயரிடம் அதிமுக மனு

அதிமுகவைச் சேர்ந்த ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ. ராஜேந்திரனும் கோவில்பட்டி எம்.எல்.ஏ. ராதாகிருஷ்ணனும் சமீபத்தில் முதல்வர் கருணாநிதியை சந்தித்து தங்கள் தொகுதியின் வளர்ச்சித் திட்டங்கள் குறித்து கோரிக்கை மனு கொடுத்தனர்.
இதையடுத்து இருவரையும் கட்சிப் பொறுப்புகளிலிருந்து இருந்து அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா நீக்கினார். ஆனால், கட்சியை விட்டு நீக்கினால் அவர்களது எம்எல்ஏ பதவி தப்பிவிடும் என்பதால் கட்சியை விட்டு நீக்கவில்லை.
இந் நிலையில் ராஜேந்திரனும், ராதாகிருஷ்ணனும் சமீபத்தில் நடந்த திமுக பொதுக் குழு, செயற் குழுக் கூட்டங்களில் சிறப்பு அழைப்பாளர்களாகப் பங்கேற்றனர். அவர்களுடன் சுயேச்சையாகிவிட்ட முன்னாள் அதிமுக எம்எல்ஏ எஸ்வி சேகரும் பங்கேற்றார்.
இந் நிலையில் இன்று அதிமுக சட்டப்பேரவை கொறடா செங்கோட்டையன், எம்.எல்.ஏ.க்கள் பி.கே.சேகர்பாபு, செந்தமிழன் ஆகியோர் சபாநாயகர் ஆவுடையப்பனிடம் ஒரு மனு அளித்தனர்.
அதில் ராஜேந்திரன், ராதாகிருஷ்ணன் ஆகியோர் மீது கட்சித்தாவல் தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.
அதிமுக கொடுத்த மனு ஆய்வில் இருப்பதாக சபாநாயகர் ஆவுடையப்பன் தெரிவித்துள்ளார்.
நாங்கள் அதிமுகவில்தான் உள்ளோம்-ராஜேந்திரன்:
இந் நிலையில் தான் இன்னும் அதிமுகவிலேயே இன்னும் இருப்பதாகவும் அதனால் நடவடிக்கை கட்சித் தாவல் தடைச் சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியாது என்றும் ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ. ராஜேந்திரன் கூறியுள்ளார்.
தானும் ராதாகிருஷ்ணனும் அதிமுகவிலேயே இன்னும் தொடர்வதால் கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் எதுவும் இல்லை.
பதவி நீக்கம் செய்யக்கோரி அதிமுக சார்பில் அளிக்கப்பட்டுள்ள மனு குறித்து சபாநாயகர் விளக்கம் கேட்டால் அதற்கு உரிய விளக்கம் அளிப்போம் என்றார்.
நாளை 'அம்மா' ஆபீஸ் வருகிறார்!
இந் நிலையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமைக் கழகத்திற்கு பொதுச் செயலாளர் ஜெயலலிதா வருகிறார். அங்கு நடக்கும் நிகழ்ச்சியில், 84 மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவிகளை அவர் வழங்குகிறார்.
மேலும், சேலம், மாநகர், புறநகர் மாவட்டங்களில் இருந்து பல்வேறு கட்சியை சேர்ந்த சுமார் 1200 பேர் அ.தி.மு.க. வில் இணைய உள்ளனர். அ.தி.மு.க. தலைமை கழகத்தில் நாளை மதியம் 2 மணிக்கு இதற்கான நிகழ்ச்சி நடக்கிறது.
ஜெயலலிதா புதிதாக கட்சியில் சேருபவர்களை வரவேற்று பேசுகிறார்.
அதன் பிறகு பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 84 மாணவ-மாணவிகளுக்கு கல்வி நிதி உதவி வழங்குகிறார். மொத்தம் ரூ.50 லட்சம் வரை உதவி வழங்கப்படுகிறது.
ஜெயலலிதா கட்சி அலுவலகத்திற்கு வருவது எப்போதாவதுதான் நடைபெறும் நிகழ்ச்சியாகும்.
அப்போதெல்லாம் கட்சியினர் மேள தாளம் முழங்க தடபுடலாக வரவேற்பு அளிப்பார்கள். அந்த வகையில் நாளைய வருகையின்போதும் பிரமாண்ட வரவேற்பு கொடுக்க அவர்கள் தயாராகி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications