சென்னையில் பாமக வக்கீல் படுகொலை- 3 பேர் சரண்
சென்னை: சென்னையில் இன்று காலை வழக்கறிஞர் ஒருவரை ஒரு கும்பல் வெட்டிப் படுகொலை செய்து விட்டு தப்பி ஓடியது.
சென்னை அயனாவரம் பழனியாண்டவர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் வன்னிய சம்பத். 49 வயதான இவர் பாமகவின் அமைப்புச் செயலாளராகவும் இருந்து வந்தார். எழும்பூர் கோர்ட்டில் வக்கீலாகப் பணியாற்றி வந்தார்.
இன்று காலை தனது மகன் சஞ்சீவை பள்ளியில் விடுவதற்காக மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றார். அயனாவரம் சவுத் ஈஸ்ட் காலனி அருகே மோட்டார் சைக்கிள் சென்ற போது அவரை 8 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து சரமாரியாக அரிவாள்களால் வெட்டித் தள்ளியது.
படுகாயமடைந்து விழுந்த சம்பத்தை உடனடியாக அரசு பொது மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக அங்கு டாக்டர்கள் தெரிவித்தனர்.
மக்கள் நெருக்கம் நிறைந்த பகுதியில், பட்டப் பகலில் நடந்த இந்த கொலைச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், பதட்டத்தையும் ஏற்படுத்தியது.
3 பேர் சரண்
தனது மகன் கண் முன்பாக பாமக வக்கீல் கொல்லப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய கொலையாளிகளைப் பிடிக்க போலீஸார் தனிப்படைகளை அமைத்தனர்.
இந்த நிலையில், இன்று மாலை திருவள்ளூர் கோர்ட்டில், கொலையாளிகள் கார்த்திக், சதீஷ்குமார், மதன் ஆகியோர் சரணடைந்தனர்.
இவர்களை போலீஸார் தங்களது காவலில் எடுத்து விசாரிக்கும்போதுதான் கொலைக்கான காரணம் தெரிய வரும்.
வக்கீல்கள் போராட்ட அறிவிப்பு
இதற்கிடையே, பாமக வக்கீல் சம்பத் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு வக்கீல்கள் சங்கத் தலைவர்களான பிரபாகரன், பால் கனகராஜ், கே.பாலு ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
கொலையாளிகளைப் போலீஸார் கைது செய்யாவிட்டால் நாளை போராட்டம் நடத்தப் போவதாகவும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications